மார்க்கெட்டிங் நிறுவனத்தில் கொடுமை; வீடியோ வெளியிட்ட விருதுநகர் சிறுவன் - மீட்ட குமரி போலீஸ்!
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ராமன்பறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மார்கெட்டிங் நிறுவனத்தில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மார்ச் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். முதலில் மேற்பார்வையாளர் பணி தருவதாக அழைத்த நிறுவனத்தினர் தேயிலை, எண்ணெய் அழகு சாதன பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்ய வலியுறுத்தியுள்ளனர். தந்தை இறந்து குடும்ப வறுமையால் தங்கையை படிக்க வைக்க பணிக்குச் சேர்ந்த சிறுவனிடம் தினமும் வீடு வீடாக சென்று 3000 ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் ஒரு வீட்டிற்கு பொருட்களை விற்பனை செய்ய சென்ற சிறுவன், அங்கிருந்த பெண்ணிடம் தனது துயரத்தை தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் செல்போனை வாங்கி தான் அனுபவிக்கும் கஷ்டங்களை வீடியோவாக பேசி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்டாலினின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிவைத்தார். அந்த வீடியோவில் பேசிய சிறுவன், "நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இப்போது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பஸ் ஸ்டாண்ட் பின் பக்கம் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ளேன். இங்கு, அசிஸ்டன்ட் மேனேஜர் வேலைக்காக 6 மாதம் டிரெய்னிங் எனச்சொல்லி வேலைக்கு அழைத்தார்கள். கடந்த மார்ச் 16-ம் தேதி இங்கு வந்து இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, வேலைக்குச் சேர்ந்தேன். முதலில் வீடுவீடாக புராடக்ட் விற்க சொன்னாங்க. நாங்க காலேஜ்ல இருந்து டிரெய்னிங்குக்கு வந்திருக்கிறோம் என பொய்சொல்லி புராடக்ட் விற்க சொன்னார்கள்.
ஒன்றரை மாதம் சாதாரணமாக விட்டாங்க. அதுக்கப்புறம் சம்பளத்தை ரொம்பவே குறைச்சுட்டாங்க. டார்கெட்னு இங்க கிடையாது என முதலில் சொல்லிவிட்டு, ஒரு நாள் 3000 ரூபாய்க்கு பொருட்கள் விற்கவேண்டும் என்றார்கள். மூவாயிரம் ரூபாய்க்கு பொருட்கள் விற்காததால் என்னை கேபினுக்கு வரச் சொல்லி அசிங்கமாக என்னை திட்டி கைய முறுக்கி அடித்தார்கள். எப்படியாவது 6 மாதம் டிரெய்னிங் முடித்து மேனேஜர் ஆக்கிவிடுவோம் என அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என தெரியவந்தது. அதனால் அங்கிருந்து வெளியே போகணும் என முடிவுசெய்தேன். ஆனால், அவர்கள் மூளைச்சலவை செய்து அங்கேயே பணிபுரியும்படி செய்தர்கள்.

அதன் பிறகும் ஒருநாள் டார்க்கெட் முடிக்காததால் என்னை கிச்சனில் சாப்பாடு வடிக்கச் சொன்னார்கள். அதன் பிறகு ரூமுக்குள் அடைத்துவைத்து மாப்புக் கட்டையை வைத்து மாறி மாறி அடித்தார்கள். அதில் என் கைவிரல் வீங்கியதில் வில்லுக்குறியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றேன். அந்த தழும்பு இப்போதும் உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு புராடக்ட்டை தவறவிட்டுவிட்டேன். அதற்கு தண்டனையாக 500 உக்கி போடச்சொன்னார்கள். அதன் பிறகு வலியால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை. அதன் பிறகும் என் அடிவயிற்றில் தாக்கினார்கள். அங்கு 8 பெண்கள் வேலை பார்க்கிறார்கள். சில இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்" என பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலையில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சென்ற நிமிர் குழு போலீஸார் நிறுவன ஊழியர் மற்றும் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். சிறுவன் கூறியது உண்மை என தெரிய வந்ததால் தக்கலை போலீஸாரின் உதவியுடன் அந்த சிறுவனை மீட்டு விருதுநகருக்கு அனுப்பி வைத்தனர். அந்த நிறுவனம் குறித்தும், அதில் பணிபுரிபவர்கள் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

