காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற திருவாரூர் வீரர் - கொண்டாட்டத்தில் சொந்த கிராம மக்கள்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரவீன் சித்திரவேல், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசத்தியுள்ளார்.


இவருக்கு நாடு முழுவதும் வாழ்த்து குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்  அவருக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவித்து அவரின் சாதனையை பாராட்டியுள்ளார்.



திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  செட்டிசத்திரம் பெரியார் தெருவை சேர்ந்த தம்பதி, சித்திரவேல்,பிரேமா  இவர்களின்  மகன் பிரவின் சித்திரவேல்.

விவசாய வேலை பார்க்கும் பிரவீனின்  தாய் தந்தை இருவரும் தங்கள் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

கிராமப்புறத்தில் இருந்து காமன்வெல்த் போட்டி வரை சென்று பதக்கம் வென்று தங்களுடைய கிராமத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக ஊர்மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


மகனின் வெற்றி குறித்து பேசிய அவரின் தந்தை சித்ரவேல்..

விளையாட்டில் நான் உழைத்தேன் இன்று என் மகன் அறுவடை செய்துவிட்டான்.


நான் ஒரு கபடி பிளேயராக  நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
அதனால் எனது மகனுக்கு  கபடி வேண்டாம் என்றுதான்,

அத்தலெட் வீரராக  ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெரும் கனவோடு அவனை பல  ஊர்களுக்கு  விளையாட செல்ல ஊக்குவித்தேன். இன்று அவன் மிகப்பெரிய வெற்றியை எனக்கு கொடுத்திருக்கிறான்.

பதக்கம் வென்ற பிரவீனின் தந்தை சித்திரவேல்



என் மகன் விளையாடியதை நான் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தேன். ஒரு ஜம்ப் என் மகன் மிஸ் பண்ணி விட்டான், இல்லையென்றால் தங்கப் பதக்கம் வென்றிருப்பான். 

இருந்தாலும் எல்லா புகழும் இறைவனுக்கே. என் மகன் வெற்றி பெற்று இருப்பது எங்கள் கிராமத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம். ஒரு கிராமத்திலிருந்து சென்று,  உலகமே இன்று திரும்பிப் பார்க்கும் அளவிற்கு என் மகன் ஜெயித்துக் காட்டியிருக்கிறார். இன்னும் நிறைய போட்டிகளில் என் மகன் நிச்சயம் வெல்வார்.


மேலும், பிரவீன் சித்திரவேலின் தாய் பிரேமா கூறுகையில்...

நாத்து நடுவது  100 நாள் வேலைக்கு செல்வது போன்ற விவசாய வேலை செய்துதான் என் மகனை படிக்க வைத்தோம். சிறு வயதிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று விளையாடி வெற்றி பெற்றிருந்தார். இன்று காமன்வெல்த் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். மிகவும் சந்தோஷமாக உள்ளது. சிறு பிள்ளையிலிருந்து கூலி வேலை செய்து அவனை வளர்த்தது, இப்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.