CWG: என் கவலைகளை ChatGPT- உடன் பகிர்ந்தேன் - டெகாத்லான் போட்டியில் வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் டெகாத்லான் (Decathlon) பிரிவில் 7,976 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர். இந்தப் பிரிவில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பதால், அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
கடந்த 2022 காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்த அவர், தற்போது இரண்டு வெவ்வேறு தனிநபர் தடகளப் பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளார்.
கண்ணீரும், ChatGPT-யும்!
இந்தச் சாதனையின் பின்னணியில் ரத்தமும் சதையுமான கடுமையான போராட்டமும், மன உறுதியும் அடங்கியுள்ளன. போட்டி தொடங்குவதற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்பு, முழங்கால் காயம் காரணமாக தனது பிரதான பிரிவான உயரம் தாண்டுதலில் ஆரம்ப உயரத்தைக் கூட தாண்ட முடியாமல் அவர் பாதியில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்தத் தோல்வி அவருக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த நள்ளிரவில் தன் மன இறுக்கத்தைத் தணிக்க, வேறு வழியின்றி தனது கவலைகளை ChatGPT-யிடம் பகிர்ந்து, அதனுடன் பேசித் தனது மனதைச் சமநிலைப்படுத்திக் கொண்டதாக அவர் பின்னர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
விடாமுயற்சியும், பதக்கமும்
மனச்சோர்விலிருந்து மீண்டெழுந்த தேஜஸ்வின், மருத்துவக் குழுவின் ஆலோசனையைப் பெற்று டெகாத்லான் போட்டியில் களமிறங்கினார். 100 மீட்டர் ஓட்டம் முதல் 1,500 மீட்டர் ஓட்டம் வரை, மிகக் கடினமான 10 பிரிவுகளிலும் இடைவிடாமல் போராடி மொத்தம் 7,976 புள்ளிகளைக் குவித்தார்.

குறிப்பாக, நீளம் தாண்டுதலில் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையையும், வட்டு எறிதலில் புதிய சாதனையையும் பதிவு செய்து இறுதியில் வெண்கலப் பதிகத்தைக் கழுத்தில் அணிந்தார்.
இந்தப் போட்டியில் கிரெனடாவின் லிண்டன் விக்டர் தங்கப் பதக்கத்தையும், கனடாவின் டேமியன் வார்னர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். தடகளப் போட்டிகளில் இந்தியாவின் பிடியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பலப்படுத்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


