மன்னிக்க முடியாத குற்றமா?- பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்தது குறித்து ப்ரீத்தியின் விளக்கம் என்ன?
நடிகர் பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து நடன ஏரியாவில் பெரிய சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.
சில தினங்களுக்கு முன் தன்னுடைய மாஸ்டர்களுக்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார் பிரபுதேவா.
சிறுவயதில் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டு அரங்கேற்றமெல்லாம் செய்திருந்தாலும் பிறகு சினிமா நடனம் என்கிற கட்டத்துக்கு வந்து அதில் பத்ம ஸ்ரீ முதலான தேசிய விருதுகள், ஏன் உலகளவில் கூட சாதனை படைத்து விட்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் தன் மாஸ்டர்களுக்காக இந்தக் கிளாசிகல் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
’இந்த நிகழ்ச்சியில் அவர் பரதத்தை முறைப்படி ஆடவில்லை, மன்னிக்க முடியாத குற்றம் புரிந்து விட்டார். பாரம்பர்ய கலைகளைத் தவறாக ஆடினால் யாரும் கேட்பார் இல்லையா. இது போன்ற வாய்ப்புகளை பிரபுதேவாவுக்குப் பதில் வேறு இளம் நடனக் கலைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம்’ என்கிற ரீதியில் நிகழ்வு குறித்துப் பதிவிட்டிருந்தார் நடிகை ப்ரீத்தி.
இவரது இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பலத்த சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது. நடன இயக்குநர்கள் பலரும் ப்ரீத்திக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரபுதேவாவிடம் 13 வருடங்களாக நடனம் கற்று தற்போது நடன இயக்குநராக உருவாகியிருக்கும் நோபிள் மாஸ்டரிடம் இது குறித்துப் பேசினோம்.

’’தன்னுடைய குருவுக்கு அவர் மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி அது. பெரிய இடைவெளிக்கு பிறகு பரதம் ஆடியிருக்கார். அதுல போய் அதே பாவனை இல்ல, மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டார்னு சொல்றதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு.
யார், யாரைச் சொல்றோம்னும் ஒண்ணு இருக்கு. அவர் இன்னைக்கு சர்வதேச அளவுல இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். அப்படிப்பட்டவரை இந்த மாதிரி விமர்சனம் செஞ்சது டான்சர்கள் மத்தியில ஒரு கொந்தளிப்பை உண்டு பண்ணியிருக்கு’’ என்றார் அவர்.
இதுபோல் பலரும் ப்ரீத்திக்கு எதிராக வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைக்கு வித்திட்ட ப்ரீத்தியையே தொடர்பு கொண்டு பேசினோம்.
‘’என்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தேன். அது தொடர்பா யாரும் ஏதாவது கருத்துச் சொல்லியிருக்காங்கன்னா அது அவங்க உரிமை. மத்தபடி இது தொடர்பா எங்கிட்ட நீங்க கேட்டீங்கன்னா என் பதில் நோ கமெண்ட்ஸ்தான்" என முடித்துக் கொண்டார் அவர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


