கொளத்தூர் EVM அதிர்ச்சி: பரிசோதிக்கப்பட்ட 3 இயந்திரங்களில் பிரச்னை - வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

சென்னை கொளத்தூர் தொகுதியில் இவிஎம் மிஷின்களை ஆய்வு செய்த பொழுது பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர்என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``2024-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையையும் Symbol Loading Unit கருவிகளின் செயல்பாட்டையும் சரிபார்க்கக் கோரலாம்.

திமுக சட்டத்துறையின் சார்பில் கழகத் தலைவரின் அனுமதியைப் பெற்று, தமிழ்நாட்டில் கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் உட்பட மொத்தம் 5 தொகுதிகளில் இந்தச் சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள விண்ணப்பிக்கப்பட்டது.

ஸ்டாலின் - சேகர் பாபு - கொளத்தூர்

அதனடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கடந்த 29-ம் தேதி முதல் கொளத்தூர் தொகுதிக்கான சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல. இயந்திரங்களின் தொழில்நுட்பத்தின் சரியான தன்மையை உறுதி செய்யும் நடைமுறையாகும். கொளத்தூரில் உள்ள 157-வது பூத்தில் வெரிஃபை பண்ணுவதற்கு மெஷின்களை எல்லாம் எடுத்து வந்து வைத்தார்கள். 

ஒரு கண்ட்ரோல் யூனிட் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களான 3 பேலட் யூனிட்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொளத்தூரில் 36 வேட்பாளர்கள் நின்றார்கள். அதனால் ஓட்டு பட்டனை அழுத்தும் மெஷின் மூன்று வைத்திருந்தார்கள். அந்த மூன்று மிஷின்கள், கண்ட்ரோல் யூனிட் என மொத்தம் நான்கு மெஷின்களிலும் அட்ரஸ் டேக் புதிதாக இருந்தது.

ராஜபாளையம் தொகுதியில் இதுவரை 10 EVM இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் தொகுதியில் 10 இயந்திரங்களைச் சரிபார்க்கக் கேட்டுக் கொண்டதில், ஒரு இயந்திரத்தில் VVPAT கருவி, வாக்குகள் பதியப்படும் கண்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் ஆகிய மூன்றும் சரியாக இயங்கவில்லை என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 14 இயந்திரங்களைச் சரிபார்க்கக் கோரப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 29-ம் தேதி 2 இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு, அவை சரியாக இயங்கின. ஆகஸ்ட் 30-ம் தேதி 2 இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டதில், ஒன்றில் VVPAT இயங்காததால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டு, தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வேறொரு வாக்குச்சாவடி இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆகஸ்ட் 31-ம் தேதி மேலும் ஒரு VVPAT கருவி செயல்படவில்லை. இதுவரை பரிசோதிக்கப்பட்ட 8 இயந்திரங்களில், 2 இயந்திரங்களில் VVPAT கருவிகள் முற்றிலும் வேலை செய்யவில்லை.

இன்றைய தினம் (ஆகஸ்ட் 1) வாக்குச்சாவடி எண் 157-க்கான இயந்திரங்களைப் பரிசோதிக்க எடுத்தபோது, அதில் மிகப்பெரிய குளறுபடிகள் வெளிப்பட்டன. கொளத்தூரில் 36 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 3 பேலட் யூனிட்கள் மற்றும் 1 கண்ட்ரோல் யூனிட் என மொத்தம் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களில் இருக்க வேண்டிய 7 Address Tags பூர்த்தி செய்யப்படாமல், புத்தம் புதிய காகிதங்களாகவே இருந்தன.

வழக்கமாக அட்ரஸ் டேக்கின் பின்புறம் வைக்கப்படும் அரக்கு சீல் (Wax Seal), இதில் முன்புறம் வைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது கண்ட்ரோல் யூனிட் திறக்கப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் அதில் இரண்டு அரக்கு சீல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்தச் சீலும் இல்லை.

இதை மனிதத் தவறு என்று தேர்தல் அதிகாரிகளால் கடந்து செல்ல முடியாது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகப் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்பதையும், இந்தத் தேர்தல் முறையான முறையில் நடைபெறவில்லை என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. இது குறித்து 19 கேள்விகளை எழுப்பி, Bharat Electronics Limited பொறியாளர்களிடம் இருந்து விளக்கம் பெற்று தருமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 30-ம் தேதியே கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

29-ம் தேதி முதல் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கான சான்றிதழ் நகல் கேட்கப்பட்டுள்ளது. விதிகள் மீறப்பட்ட 157-வது வாக்குச்சாவடி இயந்திரத்தை நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பிக்க ஏதுவாக, தனியாக சீலிட்டுப் பத்திரமாக வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரிசோதிக்கப்பட்ட 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்களில் (30%-க்கும் மேல்) தீவிரப் பிரச்னைகள் இருப்பதால், இந்தத் தொடர் நடைமுறையில் மேலும் பங்கேற்பது தேவையற்றது என்றும், தேர்தல் சரியாக நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க இதுவரை கிடைத்த ஆதாரங்களே போதுமானது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடமிருந்து சான்றளிக்கப்பட்ட நகல்கள் கிடைத்தவுடன், கழக சட்டத்துறையின் ஆலோசனையோடு உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ நாடி உரிய சட்டப் போராட்டம் தொடரப்படும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.