மழை வெள்ளத்தில் சென்ற கார்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய கணவர், இழுத்துச்செல்லப்பட்ட மனைவி, மகள்கள்
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. அஹில்யாநகர் மாவட்டத்தின் லோனி என்ற இடத்திற்கு அவினாஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
பலத்த மழையைத் தொடர்ந்து, தர்வா பகுதியில் உள்ள குப்தி ஆற்றில் மழை வெள்ளம் அதன் மீது கட்டப்பட்டு இருந்த மேம்பாலத்திற்கும் மேலே சென்று கொண்டிருந்தது. நீரின் ஆழத்தையும் நீரோட்டத்தின் வேகத்தையும் சரியாகக் கணிக்கத் தவறிய அவினாஷ் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றபோது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
வாகனம் அடித்துச் செல்லப்பட்டபோது, அவினாஷ் ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு தப்பிப்பிழைத்தார். இருப்பினும், வாகனத்திற்குள் இருந்த அவரது மனைவி மாதவி மற்றும் இரண்டு சிறு மகள்களும் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார்.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இரவு முழுவதும் தேட ஆரம்பித்தனர். இறுதியில் அண்டை மாவட்டமான யவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தவிர மகாராஷ்டிரா முழுவதும் பெய்த கனமழையால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இது தவிர 10 பேர் காயம் அடைந்தனர். மேலும் மழையால் மாநில அரசுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட பஸ்கள் பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேயில் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இன்று மகாராஷ்டிரா முழுக்க கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


