இளையான்குடியில் போதை பொருள் தயாரிப்பு ஆய்வகம் கண்டுபிடிப்பு - கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது!
ராமநாதபுரம் காவல்துறையின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 27-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டி அருகே திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்த்தாண்டம் செட்டிசார்விளையை சேர்ந்த ஜபீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கைபற்றினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உமருல் ஜமீன், முகம்மது அஸ்லம் ஆகியோரிடம் இருந்து இந்த போதை பொருளை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் அருகில் உள்ள காரிகூட்டம் கிராமத்தில் உள்ள அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரண நடத்தினர்.

இந்த விசாரணையில் இளையான்குடியை சேர்ந்த ஷேக் முகம்மது என்பவரிடம் இருந்து இந்த போதை பொருள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 120 கிராம் போதை பொருளை கைபற்றினர். இதனை இளையான்குடியை சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவரிடம் இருந்து கைமாறியதாக தெரியவந்தது.
இதையடுத்து ஹபீபுர் ரஹ்மான், சிக்கந்தர் பாதுஷா ஜமால் மொய்தீன் ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 580 கிராம் போதை பொருளை கைபற்றினர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் கும்பலின் முக்கிய குற்றவாளி இளையான்குடியை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பது தெரியவந்தது.

இவர் போதை பொருளுக்கான மூலப்பொருட்களை ஜாஹிர் உசேனுக்கு அனுப்பியதையும், அவர் தனக்கு சொந்தமான லேத் பட்டறையில் ரகசியமாக போதை பொருளான மெத்தபெட்டமைனை தயாரித்தும் போலீஸார் கண்டறிந்தனர். அங்கு சோதனை நடத்திய போலீஸார் 670 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் போதை பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை கைபற்றினர்.
இதையடுத்து போதை பொருள் தயாரிப்பு கும்பலை சேர்ந்த 10 பேரை கைது செய்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸார், ஒட்டுமொத்தமாக 1.37 கிலோ கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளையும் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


