``நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள் - சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தார்.

அவர் உடல்நிலை மோசமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜித்தேந்திர சிங் பேசிய பின், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் சோனம் வாங்சுக்கையும், அவரது மனைவியையும் சங்கி என்று கூறி விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி
இதற்குப் பதிலளிப்பதுபோல, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"நான் பா.ஜ.க-வும் இல்லை, காங்கிரஸும் இல்லை. சங்கியும் இல்லை, கம்யூனிஸ்ட்டும் இல்லை. இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை.

சமதர்மவாதியும் இல்லை, முதலாளித்துவவாதியும் இல்லை. தாராளவாதியும் இல்லை, பழமைவாதியும் இல்லை.

தலித்தும் இல்லை, பிராமணரும் இல்லை. சமணரும் இல்லை, பௌத்தரும் இல்லை, இந்துவும் இல்லை. பஞ்சாபியும் இல்லை, ஒடியாவும் இல்லை, லடாக்கியும் இல்லை.

நான் இவள்

நான் இவர்கள் அனைவருக்கும், அதற்கு மேலும்கூட. அனைத்துக் கோட்பாடுகளுக்கும் ("isms") அப்பாற்பட்டவள். எதிலிருந்தும் சிறந்ததை எடுத்துக்கொண்டு, தேவையில்லாததை விட்டுவிடுபவள்.

மனிதனால் உருவாக்கப்பட்ட குறுகிய எல்லைகளுக்குள் நம்மை நாமே அடைத்துக்கொள்ளும்போது, நமது எல்லையற்ற ஆற்றலை நாமே குறைத்துக்கொள்கிறோம்.

நமது உண்மையான அடையாளம் அரசியல், சமூகம், மதம் அல்லது எந்தவொரு கோட்பாட்டையும் சார்ந்ததல்ல. அது வெறும் உணர்வு நிலையின் வடிவம் மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.