இனி காசாவில் நோ ஆயுதம்; புதிய அரசின் கரங்களில் பாலஸ்தீனம் - ட்ரம்ப் நன்றி

ஈரான் போர் தீவிரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஏற்கெனவே நான் முடித்து வைத்துவிட்டேன் என்று கூறிய இஸ்ரேல் - காசா போர் ஒப்பந்தத்தை தூசி தட்டி எடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கடந்த அக்டோபர் மாதம் ட்ரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் காசா ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமைதி குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் தற்போது ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு - ட்ரம்ப்

அமைதிக் குழுவின் ஒப்பந்தம்

"இன்று, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை ‘அமைதி குழு’ எட்டியுள்ளது.

நிலையான அமைதியையும் பாதுகாப்பையும் நோக்கி எடுத்து வைக்கப்பட்ட மிக முக்கிய மைல்கல் இது.

பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில், ‘அமைதி குழுவுடன்’ இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற உள்ள ஒரு புதிய பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தின் கீழ் காசா கொண்டுவரப்படுவதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியப் படியாகும்.

மிகப்பெரிய திருப்புமுனை

அதே நேரத்தில், காசா இனி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்படாது என்பதால், இஸ்ரேலுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பும் கிடைக்கும்.

ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகும்.

இந்த ஒப்பந்தம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும். நிராயுதபாணியாக்கும் பணி நிறைவடையும் போது, இஸ்ரேலியப் படைகள் வெளியேறும்.

சர்வதேச ஸ்திரத்தன்மைப் படை புதிய பாலஸ்தீனக் காவல்துறையுடன் இணைந்து, காசா அதன் குடிமக்களுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் பாதுகாப்பான இடமாக இருப்பதை உறுதி செய்யும்.

நன்றி!

ஒரு வருடத்திற்கு முன்பு, இங்கே கொடூரமான போரும், மனிதநேய நெருக்கடியும், பிணைக்கைதிகள் கொடூரமான முறையில் சிறைபிடிக்கப்பட்ட சூழலும் நிலவியது.

இப்போது நாம் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். எனினும் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.

எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய மத்தியஸ்தர்களுக்கு அவர்களின் முக்கிய முயற்சிகளுக்காகவும், குறிப்பாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையைச் சாத்தியமாக்க ஓயாது உழைத்த எனது சிறப்பான குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கரங்களில் பாலஸ்தீனம் 

அக்டோபர் 7 அன்று காசாவிலிருந்து உருவெடுத்த அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்பட மாட்டாது!

இந்த ஒப்பந்தத்தின் கீழ், காசா இறுதியாக அதன் மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு புதிய பாலஸ்தீன அரசின் கரங்களில் இருக்கும்.

சாத்தியமே இல்லை என்று அனைவரும் கூறிய இந்த அசாத்தியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.