காமன்வெல்த்: 11 மாதக் குழந்தையின் அம்மா; PhD மாணவி - தடைகளைத் தாண்டி சாதித்த சீமா; யார் இவர்?

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பெண்களுக்கான தட்டு எறிதல் பிரிவில் ஹரியானாவின் சீமா காலிராம்னா பங்கேற்றார்.

போட்டியில் 58.65 மீட்டர் தூரம் தட்டு எறிந்து மூன்றாம் இடம் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் சீமா காலிராம்னா. ஆறு வாய்ப்புகளில் நான்கு வாய்ப்புகள் தவறியபோதும், சோர்ந்துபோகாமல் அவர் எறிந்த அந்த ஒரு வீச்சு, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையையும் பதக்கப் பட்டியலை நோக்கி உயர்த்தியிருக்கிறது.

களத்தில் எறிந்த ஒவ்வொரு வீச்சிலும் தன் வியர்வையையும், கண்ணீரையும் விதையாகத் தூவி, இன்றைக்கு காமன்வெல்த் மேடையில் வெண்கலப் பதக்கமாய் அறுவடை செய்திருக்கிறார்.

சீமா காலிராம்னா

சீமாவிற்கு விளையாட்டு என்பது ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் கூடைப்பந்து மற்றும் ஈட்டி எறிதல் வீரரான இவரது தந்தைதான், சீமாவின் திறமையைச் சிறுவயதிலேயே கண்டறிந்து விளையாட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

தேசிய அளவில் தட்டு எறிதல் வீரராகத் திகழ்ந்த அவரது கணவர் ரவீந்தர் காலிராம்னாதான் சீமாவின் பயிற்சியாளராக இருந்து, அவரை ஒவ்வொரு வீச்சிலும் செதுக்கி வருகிறார். விளையாட்டு வீரராக மட்டுமின்றி, பிவாநியில் உள்ள சவுத்ரி பன்சிலால் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் துறையில் முனைவர் (PhD) பட்டத்துக்கான படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.

ஒரு பெண்ணிற்கு தாய்மை என்பது வெற்றியின் முடிவு அன்று என்பதை சீமா நிரூபித்துக் காட்டியுள்ளார். தனது மகன் ருத்ராவின் பிறப்பிற்குப் பிறகு விளையாட்டிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்த சீமா, குழந்தை பிறந்த 11 மாதங்களிலேயே மீண்டும் களத்திற்குத் திரும்பினார். ஒரு தாயாகக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு, மற்றொரு புறம் முனைவர் பட்டத்திற்கான படிப்பையும் தொடர்ந்துகொண்டே, மைதானத்தில் கடுமையாகப் பயிற்சி செய்தார்.

இந்த அசாத்தியமான மனஉறுதிதான், 2025 தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 59.73 மீட்டர் எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை எட்டி, காமன்வெல்த் போட்டிக்குத் தகுதி பெறவும் வைத்தது.

சீமா காலிராம்னா
சீமா காலிராம்னா

ஆனால், இந்த வெற்றிப் பாதையின் பின்னணியில் அளப்பரிய தியாகங்களும், தாயின் பிரிவுத் துயரமும் ஒளிந்திருக்கின்றன. வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமா, ``என் மகனை என்னால் இங்கு அழைத்து வர முடியவில்லை. ஒரு தாயாக அவனைப் பிரிந்து போட்டியில் பங்கேற்பது மிகவும் கடினமானது, வேதனையானது.

இதை என் வாழ்வின் மிகப்பெரிய தியாகம் என்றே சொல்வேன்" என்று சீமா நெகிழ்ச்சியோடு குறிப்பிடும்போது, அந்தப் பதக்கத்தின் கனம் இன்னும் கூடுகிறது.

மேலும், தான் பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தன் கணவருக்கு முழு மனதுடன் சமர்ப்பித்த சீமா. "என் கணவர் போட்டிக்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் இங்கு வந்தார். இந்தச் சாதனைக்குப் பின்னால் இருக்கும் அனைத்து கடின உழைப்பும், தியாகங்களும் அவருடைய தொடர்ச்சியான ஆதரவால்தான் சாத்தியமானது" என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ``அரசுக்கு எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், ஒரு குழந்தை விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பினால், அரசு அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.

சீமா காலிராம்னா
சீமா காலிராம்னா

ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குத் தியாகங்கள், நிதி நெருக்கடிகள், மனநலச் சவால்கள் மற்றும் சத்துணவுப் பொருள்களுக்கான செலவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.

கிளாஸ்கோவின் கடும் குளிரிலும், தொடர் பயிற்சிகளுக்கு நடுவிலும் தன் மகனின் நினைவை மனதிற்குள் அடக்கிக்கொண்டு அவர் எறிந்த ஒவ்வொரு வீச்சும் ஒரு தாயின் போராட்டத்தின் அடையாளம் மட்டுமல்ல, தடைகளை உடைத்து சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும், தாயிற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்து!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.