திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை பணி ஆய்வாளர் லோகநாதன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரோ, வண்டல் மண் எடுப்பதற்கு ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட், இது தொடர்பாக நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது எட்வர்டிடமிருந்து லஞ்சப் பணம் ரூ.4000-த்தை புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் லோகநாதன் கேட்டு பெற்று வைத்திருந்தபோது, கையும் களவுமாகப் பிடிபட்டார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட நீர்வளத்துறை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 உதவி பொறியாளர் அலுவலகத்தில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர். வண்டல் மண் எடுக்க நீர்வளத்துறை அதிகாரி லஞ்சம் கேட்டு கைதான சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


