தாத்தா தமிழகத்தின் ஸ்பீக்கர், பேத்தி சர்வதேச `பெஸ்ட் ஸ்பீக்கர்! - கலக்கும் காந்தள்

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். ரோம் சட்டம் என்னும் ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்நகரின் முக்கிய‌ அடையாளம். உலக அளவில் இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய நான்கு வகை குற்றங்களை நிகழ்த்தும் அல்லது அவற்றுக்குக் காரணமாக இருக்கும் யாராக இருந்தாலும், இந்த நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள் வருவர்.

தற்போது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை போர்க்குற்றங்களுக்காக விசாரிப்பதற்கான சட்டபூர்வ முயற்சிகளில் இறங்கியிருக்கிறதாம், இந்த நீதிமன்றம்.

இத்தகைய பெருமைக்குரிய இந்த நீதிமன்றத்திடமிருந்து பெஸ்ட் டெஃபென்ஸ் கவுன்செல் ஸ்பீக்கர் என்கிற பெருமைமிகு விருதைப் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த காந்தள்.

தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக இந்த விருதைப் பெற்றிருக்கும் காந்தள், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் கொள்ளுப் பேத்தி மற்றும் முன்னாள் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்துவின் பேத்தி ஆவார்.

kandhals best speaker award

காந்தளிடம் வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினோம்.

``சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடிச்சேன். பிளஸ் டு-வில் ஆங்கிலத்தில் மாநில அளவுல முதலிடம் பிடிச்சேன். அந்தப் பள்ளியிலிருந்து வெளியில் வரும்போது பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட் விருதும் வாங்கினேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேடமும் இந்தப் பள்ளியில் இந்த விருதை வாங்கியவங்கதான்.

தொடர்ந்து சட்டம் படிக்க விருப்பப்பட்டு துபாய் போனேன். அங்க எல்.எல்.பி கோர்ஸ்ல சேர்ந்து போன மாசத்தோட அந்தப் படிப்பும் முடிஞ்சிடுச்சு.

ஐக்கிய அரபு அமீரகத்துல நான் படிச்ச யுனிவர்சிட்டியில இருந்துதான் இந்தப் போட்டியில கலந்துக்கிட்டேன். வருடா வருடம் சர்வதேச அளவுல நடக்கிற போட்டி இது. ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்டு முதலான உலகின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்கள்ல இருந்தெல்லாம் மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க.

முதல்ல கட்டுரை வடிவத்துல எழுதற மாதிரி இருக்கும். முப்பதாயிரம் வார்த்தைகள்ல எழுதியிருந்தேன் நான்.

இந்த எழுத்து வடிவ கட்டுரைக்கு ஒரு வெயிட்டேஜ் கொடுப்பாங்க.

ஆனாலும் ஃபைனலில் ஓரல்லா பேச வச்சுதான் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறாங்க.

பேச்சின் முக்கியக் கருப்பொருளா சர்வதேச நீதிமன்றம் சந்திகிற சவால்கள், அதன் எல்லைகளைத் தீர்மானிப்பது, கைது செய்கிற நிலை வந்தால் அப்போது கடைபிடிக்கிற நடைமுறைகள்னு பல விஷயங்களைத் தொட்டுப் பேசியிருந்தேன். தேர்வுக்குழுவு என்னைத் தேர்ந்தெடுத்தது. இந்தியாவில் இந்த விருதை இதுக்கு முன்னாடியும் சிலர் வாங்கியிருக்கறதா சொன்னாங்க. தென்னிந்தியாவுல நான்தான் முதல் ஆளாம்.

விருதை அப்பா மணிகண்டனுக்கும் அம்மா யாமினி கண்ணப்பனுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்கிறார் காந்தள்.

kandhal with parents

காந்தளின் அப்பாவும் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகனுமான மணிகண்டனிடம் பேசியபோது,

``நடுவர்களாக இருந்தவங்க எல்லாருமே சர்வதேச சட்டத்து நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள். அவங்க காந்தளுடைய லீகல் அனாலிசிஸ், பிரசென்டேஷன் ஸ்கில், கேள்விகளுக்குப் பதில் அளிக்கிற தன்மை எல்லாவற்றாலும் கவரப்பட்டே அவளைத் தேர்ந்தெடுத்தாங்க.

அந்த நிமிடம் எங்களுக்கு ரொம்பவே பெருமையான தருணமா இருந்தது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்னு சொல்வாங்களே, அதேதான்... அந்தச் சமயத்தில் என்னுடைய தந்தை காளிமுத்து, மாமனார் ஏ.எல்.எஸ் கண்ணப்பன்னு எங்க முன்னோர்களைத்தான் நினைச்சோம். அவங்க ஆசி இருந்ததாலதான் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கு.

சர்வதேச சட்டத்துல உயர்படிப்பு படிச்சு மனித உரிமைகள், போர்க்குற்றங்களுக்கு எதிரான வழக்குகளில் வாதாடணுங்கிறது என் மகளின் ஆசை. அதுவும் நிறைவேறும்னு நம்புறோம்" என்றார் அவர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.