Rahane: 278... Signing Off - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே!
"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார்.
இந்தியாவின் 278-வது டெஸ்ட் வீரராக அறிமுகமான அவர், வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் மிகவும் நம்பகமான தூணாகவும், 2020-21 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் ஒட்டுமொத்த அணியையும் மீட்டெடுத்த அமைதியான கேப்டனாக கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்தவர்.
டொம்பிவிலி ரயிலும், விடாமுயற்சியும்!
1988-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் எளிய குடும்பத்தில் பிறந்த ரஹானேவின் கிரிக்கெட் கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மும்பையின் டொம்பிவிலிப் பகுதியில் இருந்து தினமும் லோக்கல் ரயிலில் பயணம் செய்து, கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்று திரும்பிய அந்தச் சிறுவனின் உழைப்புதான் பின்னாளில் இந்தியாவின் டெஸ்ட் அணியை ஆச்சரியப்படுத்தியது.
மும்பை கிரிக்கெட்டின் கடுமையான போட்டிச் சூழலில் தன்னைச் செதுக்கிக்கொண்ட அவர், 2006-07 ரஞ்சி டிராபி தொடரில் முதல் தர கிரிக்கெட்டில் காலடி வைத்தார்.
தனது அறிமுகப் போட்டியிலேயே 143 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அவர், 2008-09 ரஞ்சி சீசனில் 1,089 ரன்கள் குவித்து மும்பையின் சாம்பியன் பட்டத்திற்கு முக்கிய உந்துசக்தியாக விளங்கினார். ஹைதராபாத்துக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் அடித்த 265 ரன்கள் இந்தியக் கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை அவர்தான் என்பதை உரக்கச் சொன்னது.
தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 14,000 ரன்களுக்கு மேல் குவித்த ரஹானே, எந்த விதமான கடினமான பிட்சுகளிலும் நீண்ட நேரம் நின்று ஆடும் அசாத்திய திறமையைக் கொண்டிருந்தார்.

ஐபிஎல் பயணம் மற்றும் சிஎஸ்கேவின் திருப்புமுனை!
2008-ல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடங்கிய அவரது பயணம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முழு வடிவம் பெற்றது. பல சீசன்களில் அந்த அணியின் பிரதான தூண்களாகத் திகழ்ந்து, பின்னர் கேப்டனாகவும் உயர்ந்தார்.
ராஜஸ்தான் அணிக்காக அவர் அடித்த சதங்களும், பொறுப்பான ஆட்டங்களும் அவருக்கு டி20 அரங்கிலும் தனி அடையாளத்தைத் தந்தன. இதற்கிடையே ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனப் பல்வேறு அணிகளுக்காகப் பயணித்த அவர், 2023-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணைந்தது அவரது டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த திருப்புமுனையாக அமைந்தது.
பாரம்பர்ய டெஸ்ட் வீரர் என்ற முத்திரையைச் சுமந்திருந்த ரஹானே, தோனியின் மஞ்சள் படையில் இணைந்த பிறகு முற்றிலும் மாறுபட்ட அதிரடி அவதாரம் எடுத்தார். 172-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிட்ட அவர், சிஎஸ்கேவின் ஐந்தாவது கோப்பை வெல்லும் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றினார். அந்த அபாரமான ஆட்டம்தான், அவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கும் கம்பீரமாகத் கூட்டி வந்தது.
வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன்!
2013-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரஹானே, வெளிநாட்டுப் பிட்ச்களில் இந்தியாவின் உண்மையான ‘மிடில் ஆர்டர் காவலன்’ ஆனார். சொந்த மண்ணில் ரன்கள் குவிப்பது ஒருபுறமிருக்க, உலகின் கடினமான பவுன்சர்கள் மற்றும் ஸ்விங் பிட்ச்களில் இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டுவந்தவர் ரஹானே.
நியூசிலாந்தின் வெலிங்டனில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதம், அதே ஆண்டு கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராகப் பதிவு செய்த சதங்கள் உலகளவில் கவனம் ஈர்த்தன.

மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளாசிய 147 ரன்கள், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் அவர் அடித்த சதங்கள் ஒவ்வொன்றும் இந்திய அணியின் சரித்திர வெற்றிகளுக்கு அடித்தளமிட்டவை.
குறிப்பாக, 2015-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த இந்திய வீரர்களில் ஒருவராகவும் சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா காபா கோட்டையைத் தகர்த்த கேப்டன்!
ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கையின் மகுடம் சூடும் தருணம் என்றால், அது நிச்சயமாக 2020-21 பார்டர்-கவாஸ்கர் தொடர்தான். அடிலெய்டில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்குச் சுருண்டு தரைமட்டமானதும், உலகமே இந்தியா படுதோல்வி அடைந்துவிடும் என்று கணித்தது.
அந்தச் சூழலில், கேப்டன் விராட் கோலி விடுப்புக்காக நாடு திரும்ப, ஒட்டுமொத்த அணியின் தலைமைப் பொறுப்பும் ரஹானேவின் அமைதியான தோள்களில் விழுந்தது.

அடிலெய்ட் அதிர்ச்சியிலிருந்து அணியை மீட்டெடுத்த அவர், மெல்போர்ன் டெஸ்ட்டில் அழுத்தமான சூழலில் களமிறங்கி 112 ரன்கள் விளாசினார். சற்றும் பதற்றமில்லாத அவரது கேப்டன்சி பாணி, இளம் வீரர்களை உற்சாகப்படுத்தி இந்தியாவை மீண்டும் தொடருக்குள் கொண்டுவந்தது.
சிட்னியில் காயத்தையும் பொருட்படுத்தாமல் போராடி டிராவை உருவாக்கிய இந்திய அணி, இறுதியாக பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தோற்காத கோட்டையைத் தகர்த்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
அந்த வெற்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வெளிநாட்டு தொடர் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இடைக்கால கேப்டனாக 6 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய ரஹானே, 4 வெற்றிகளையும் 2 டிராக்களையும் பெற்று தோல்வியே சந்திக்காமல் தனது கேப்டன்சி பயணத்தை நிறைவு செய்தார் என்பது வரலாற்றுச் சாதனை.
புள்ளிவிவரங்களும் சாதனைகளும்!
* டெஸ்ட் கிரிக்கெட்: 85 போட்டிகள், 5,077 ரன்கள், 12 சதங்கள், 26 அரைசதங்கள்.
* ஒருநாள் போட்டிகள்: 90 ஆட்டங்கள், 2,962 ரன்கள், 3 சதங்கள்.
* சர்வதேச டி20 கிரிக்கெட்: 20 போட்டிகள், 375 ரன்கள்.
பேட்டிங்கைத் தாண்டி, ஸ்லிப் பகுதியில் நின்று அவர் பிடித்த 100-க்கும் மேற்பட்ட கேட்ச்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய பலமாகவும், அணியின் வெற்றிக்கு மறைமுகக் காரணமாகவும் அமைந்தன.

நிறைவுப் பயணம்!
"இந்த விளையாட்டுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். என்னைவிட நாடுதான் முக்கியம் என்ற ஒரே விதியோடு விளையாடினேன்" என்று தனது ஓய்வுச் செய்தியில் ரஹானே குறிப்பிட்டிருந்தார். அந்த வார்த்தைகள் அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையின் எளிய மற்றும் ஆழமான பிரதிபலிப்பு.
சில வீரர்கள் தங்களின் பிரமாண்டமான புள்ளிவிவரங்களால் நினைவில் நிற்பார்கள்; சில வீரர்கள் தாங்கள் பெற்றுக்கொடுத்த கோப்பைகளால் மதிக்கப்படுவார்கள். ஆனால், அஜிங்க்யா ரஹானே எந்தவித விளம்பரமும் இன்றி, சத்தமில்லாமல் தன் வேலையைச் செய்து, இந்திய அணிக்குத் தேவைப்பட்ட இக்கட்டான தருணங்களில் எல்லாம் அரணாக நின்ற அமைதியான கேப்டனாக என்றென்றும் நினைவில் நிற்பார்.
"Cap No.278... Signing Off" என்று அவர் சர்வதேச களத்திலிருந்து விடைபெற்றாலும், இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் அவர் உருவாக்கிய தருணங்கள் எப்போதுமே அழியாது!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


