சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் முதல் நாள் இரவு கோயிலை பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வந்தபோது கோயில் மெயின் கேட் திறந்து இருந்தது. அதோடு கோயில் கதவும் திறந்து இருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் கோயிலுக்குள் இரண்டு பேர் நுழைந்து திருடுவது பதிவாகி இருந்தது. கோயிலுக்குள் நுழைந்த இரண்டு பேரில் ஒருவர், மிகவும் பவ்யமாக தனது காதைப் பிடித்துக்கொண்டு சாமியிடம் மன்னிப்பு கேட்கிறார். உண்டியல் திருடுவதற்காக மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறார்.
மற்றொருவர் அங்கிருந்த உண்டியலை திறக்க முயற்சி செய்கிறார். முதலாம் நபர் சாமியிடம் மன்னிப்பு கேட்டு முடித்த பிறகு யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டாவது நபர் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த பணத்தை பேக் ஒன்றில் அள்ளிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து கோயில் பூசாரி ஜிதேந்திர பாண்டே கூறுகையில், "காலை 8 மணியளவில், கோயிலுக்கு வந்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு, சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தோம், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களைப் பார்த்தோம். அதன் பிறகு, இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தோம். காவல் நிலைய அதிகாரிகளும் ஷீட்லா மாதா கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். கடந்த ஓராண்டாக தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது.
இது மூன்றாவது சம்பவம். இதற்கு முன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத போது, இரு தெய்வங்கள் அணிந்திருந்த தங்கத்தாலி, தங்கம் உள்ளிட்டவை திருடப்பட்டன. இரண்டாவது சம்பவத்தின் போது, உண்டியல் உடைக்கப்பட்டது, இம்முறையும், இரு கோயில்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

