பஞ்சாப்பில் கொத்தமைடியாக இருந்த மகன்; 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி கதை!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூமாலைப்பட்டி ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினருக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் இருந்தனர்.

இக்குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக கோவை வந்துள்ளனர். கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த அவர்களின் மூத்த மகன் பிரகாஷ் மூன்றாவது வரை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியிலும், சாய்பாபா காலனி அரசு உதவிபெறும் பள்ளியில் நான்காவதும் படித்துள்ளனர்.

இதனிடையே 2003 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட சின்ன கோபத்தில் வீட்டைவிட்டு போன பிரகாஷ், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கொத்தடிமையாக இருந்த இளைஞர்

கொத்தடிமையாக இருந்து மீட்பு

இரண்டு மாதம் கழித்து சென்னையில் இருப்பதாக போனில் கூறிய அவர், அதன் பிறகு பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் பல ஆண்டுகளாகப் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், பிரகாஷ் உயிரிழந்திருப்பார் எனப் பெற்றோரும், உறவினர்களும் நம்பியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜீலை 1ம் தேதி  திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் முத்தையா என்பவர் சுந்தரியைக் கண்டறிந்து, அவரது மகன் பிரகாஷ் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள லச்கானி என்ற இடத்தில் இருக்கும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டியின் காப்பகத்தில் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பிரகாஷின் சகோதரர் பிரபு மற்றும் உறவினர்கள் சிலர் பஞ்சாப் சென்று அங்கு காப்பகத்தில் இருந்த பிரகாஷை அழைத்து வர சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது, பாகிஸ்தான் எல்லையில் ஒரு வீட்டில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பிரகாஷிற்கு ஒருவேளை உணவு மட்டுமே கொடுத்துள்ளனர்.

மூன்று வேலை உணவு கொடுத்தால் தப்பிச் சென்று விடுவான் என்ற எண்ணத்தில் ஒருவேளை மட்டுமே உணவு அளித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டியின் நிர்வாகிகள் அங்கு சென்று பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு, அவரை மீட்டு வந்து காப்பகத்தில் மூன்று வருடம் தங்க வைத்துள்ளனர்.

தமிழ் மொழி பேசியதால் சண்டிகர் தமிழ்ச் சங்கத்திற்கு அந்தச் சொசைட்டி நிர்வாகிகள் தகவல் அளித்தனர். அவர்கள் மூலம் முத்தையாவிற்கு பிரகாஷ், லச்கானி என்ற இடத்தில் இருப்பது தெரியவந்து குடும்பத்தினருக்குத் தகவல் அளித்தது தெரியவந்தது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மகனைப் பார்த்த தாய்

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்களுடன் பிரகாஷை அனுப்ப முடியாது என நிர்வாகிகள் தெரிவித்த நிலையில், ஏமாற்றத்துடன் கோவை திரும்பினர். பின்னர் பிரகாஷ் கோவையில் படித்தது தெரியவந்த நிலையில் அவரது தாய் சுந்தரி கோவை மாவட்ட ஆட்சியரை அணுகி நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகனை மீட்டு வர உதவி செய்யுமாறு மனு  அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் செய்திருந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள லச்கானி என்ற இடத்தில் இருக்கும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி நிர்வாகிகளுக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டது.

தாயுடன் சேர்ந்த பிரகாஷ்
தாயுடன் சேர்ந்த பிரகாஷ்

இதையடுத்து நேற்று முன்தினம் பிரகாஷின் தாயார் சுந்தரி அவரது சகோதரர் பிரபு செய்தியாளர் முத்தையா ஆகியோர், சண்டிகர் சென்று சண்டிகர் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்றுள்ளனர். அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜசேகரன் தன்னார்வலர்களுடன் இணைந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பிரகாஷை காவல் துறையினர், மாவட்ட அதிகாரிகள்  முன்னிலையில் சுந்தரியிடம் ஒப்படைத்தனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனைப் பார்த்த சுந்தரி பிரகாசை ஆரத்தழுவி கண்ணீர் மல்க கதறி அழுதார். தொடர்ந்து சண்டிகர் தமிழ் சங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரகாஷ் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று கோவை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொத்தமையடியாக இருந்து மீட்கப்பட்ட இளைஞர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.