`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌.. - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயமணியின் மருமகளாக திருமதி செல்வம் சீரியலில் நடித்த நடிகை அபிதாவிடம் நாம் பேசினோம். தற்சமயம் கேரளாவில் இருப்பதால் அவருக்கு ஜெயமணி மறைந்தது குறித்து தெரியாத சூழலில், தகவல் கேள்விப்பட்டதும் அதிச்சியடைந்தவர், சில நிமிடம் ஆசுவாசப்படுத்திக கொண்டு பேசத் தொடங்கினார்.

ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி கூடப் பேசினார். போனை அட்டென்ட் செய்ததுமே, மருமகளேங்கிற அவர் குரலைக் கேட்டா அப்படியொரு சந்தோஷம் எனக்கு உண்டாகும்.

திருமதி செல்வம் தொடரில் எனக்கு மாமனார் கேரக்டர் பண்ணும் போது அப்படிக் கூப்பிடத் தொடங்கினார். நாளடைவுல என்னைக் கூப்பிடணும்னாலே அந்த வார்த்தையிலதான் கூப்பிடுவார்.

Abitha

வாய் நிறைய மருமகளேனு தன்னுடைய சொந்த மருமகளைக் கூட அந்தளவு கூப்பபிட்டிருப்பாரானு தெரியலை.

காமெடி சீன்ல எந்தளவு வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பாரோ அதே அளவு எமோஷனல் காட்சிகளில் மனுஷன் நடிப்புல பின்னிடுவார். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு யாராவது பேசத் தயங்கினா அவங்ககிட்ட வலுக்கட்டாயமாப் போய் வம்பிழுத்துப் பேசுவார்.

நடிக்க வந்த பிறகு கூச்சம், தயக்கமெல்லாம் தூக்கி எறிஞ்சுடணும். விருதெல்லாம் வேண்டாமானு ஜாலியாப் பேசியே அவங்களை மிங்கிள் ஆக வச்சிடுவார்.

திருமதி செல்வம் சீரியல்ல நடிச்சு முடிச்ச பிறகும் தொடர்புலயேதான் இருந்தோம். அப்பப்ப பேசுவார். கேரளாவுலயே இருந்தன்னா என் மருமகளை நான் பார்க்கணும்னா என்ன செய்யறது? நு கேப்பார். அவசியமில்லாம நடிப்புக்கு பிரேக் விடக்கூடாதுனு அட்வைஸ் பண்ணுவார். கடைசியா ஒரு தடவை அவர் முகத்தைப் பார்க்க முடியாம போனது என்னுடைய துரதிர்ஷ்டம். உடனே எனக்கு தகவல் தெரிஞ்சிருந்தாக் கூட சென்னை கிளம்பி வந்திருப்பேன்.

இனி மருமகளேன்னு ஒரு போன் கால் சென்னையிலிருந்து வராதுங்கிறதை நினைச்சாலே மனசு பாரமாகுது என குரல் உடைய முடித்தார் அபிதா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.