கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்? - திமுக கவுன்சிலர் கலகல
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில் பேசிய 181 வது வார்டு திமுக கவுன்சிலர் விஸ்வநாதன் எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுகிறார்கள்! என நகைச்சுவையாக பேசியிருந்தார்.
நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், என்னுடைய வார்டில் மக்களுக்கு குடிநீரே முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. தேர்தலுக்கு முன்பெல்லாம் இப்படியில்லை. தேர்தலுக்கு பிறகுதான் பிரச்னை என மக்கள் கூறுகின்றனர். இத்தனைக்கும் நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் சமீபத்தில்தான் ஆய்வு செய்தார். அப்படியிருந்தும் நிலைமை இப்படியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொசுக்கடியாக வேறு இருக்கிறது.
முன்பெல்லாம் வெளியில்தான் கொசுத்தொல்லை இருக்கும். இப்போது சமையலறையிலும் கழிவறையிலும் கூட கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகுதான் இப்படி என மக்கள் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் இதற்கும் நம்மைதான் குறை கூறுவார்கள். கொசுக்களை என்ன திமுகக்காரனா லாரியில் கடத்தி வந்து ஏரியாவுக்குள் விட்டு மக்களை கடிக்க விடுகிறான்? நம்பவில்லையென்றால் நீங்களே வாருங்கள் நானே என்னுடைய வார்டுக்கு அழைத்து சென்று கொசு தொல்லையை காட்டுகிறேன் என்றார்.

உடனே துணை மேயர் மகேஸ் குமார், ஒஹொ...இட்டுன்னு இட்டுனு வர்றேன்னு சொல்றீங்களா... என கேட்க மாமன்றம் முழுக்க சிரிப்பலை. தொடர்ந்து பேசிய மகேஸ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முதல்வர்தான் கையில் வைத்திருக்கிறார். என்னுடைய வார்டிலும் கூட குடிநீர் பிரச்னை இருக்கிறது. முதல்வர்தான் தன்னுடைய துறை சார்ந்த விஷயத்தை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

