மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில்  இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கர்ணாவூரில் அமைந்துள்ள தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலுக்குச் சொந்தமான மதுபான ஆலையில், காலை முதல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்தச் சோதனையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரி சித்ரா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மது ஆலையில் சோதனை நடத்தப்படுவதால் மன்னார்குடி பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் சோதனை நடக்கும் மது ஆலையைச் சுற்றி தி.மு.க-வினர் திரண்ட வண்ணம் இருப்பதால், மன்னார்குடி நகர போலீஸார் அப்பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில்  சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டிருந்தன.

அந்த அடிப்படையில் மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவிற்கு சொந்தமான இந்த மதுபான ஆலையில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தரப்பில், தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சோதனையின்போது மது ஆலையில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனைப் பதிவுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தி.மு.க-வின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மது ஆலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவதால் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.