தமிழ்த்தாய் வாழ்த்து: ``ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது - அமைச்சர் நிர்மல் குமார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தலைமை தாங்கிய இந்த விழாவில், முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நம் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவர் பெயரில் இருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா? என தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர். இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுதான் என்றாலும் அப்போதே அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை பொருட்படுத்தாமலே ஆளுநர் இவ்வாறு செயல்பட்டிருக்கிறார் எனக் கண்டனங்கள் எழுகின்றன.
இந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது, ``தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடலாகப் பாடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான செயலாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் முதன்மை உரிமை அளிக்கப்பட வேண்டும். அதுவே முதலாவதாகப் பாடப்பட வேண்டும். ஆளுநர் தரப்பில் இருந்து தொடர்ந்து இது போன்ற சர்ச்சைக்குரிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளோடு நிறுத்திக் கொள்ளாமல், இதனை உயர்கல்வி நிறுவனங்கள் வரை கொண்டு செல்வது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும். இது தேவையற்ற சர்ச்சைகளையே உருவாக்கும். எனவே, இது கடுமையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் இப்படியான செயல்பாடுகளை உடனடியாகத் தவிர்க்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட சுற்றறிக்கையில், முதலில் மாநில மொழிப் பாடலுக்கும், இரண்டாவதாக மத்திய அரசின் பாடலுக்கும், மூன்றாவதாகவே தேசிய கீதத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதன்மையாகப் பாடப்பட்டு வருகிறது. எனவே, இந்த நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்தாலோசித்து, சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது விரைவாக எடுக்கப்படும்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


