காவிரியில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் வேண்டாமா? - மத்திய இணை அமைச்சர் கூறுவது உண்மைதானா?!
"மேல்படுகை மாநிலமான கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 2018 பிப்ரவரியில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மத்திய அரசு அறிந்துள்ளதா?
உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது திட்டத்திற்குக் கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற்றுள்ளதா;
ஆம் எனில், அதுகுறித்த விவரங்கள் என்ன; மற்றும்
மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள இந்த மாநில முன்மொழிவின் தற்போதைய நிலை என்ன?"
இது நேற்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வி.
இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்துள்ள பதில்தான், தமிழ்நாட்டில் தற்போது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
அன்புமணியின் கேள்விக்கு, ராஜ் பூஷன் சௌத்ரி அளித்துள்ள பதில் இது தான்...
"காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, தமிழ்நாட்டைக் கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைக் கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
16.02.2018 நாளிட்ட தனது உத்தரவில், 2007-ஆம் ஆண்டின் காவிரி நீர் நடுவர் மன்றத் தீர்ப்பின் (CWDT Award) XVIII-வது பிரிவை உகந்ததாக ஏற்றுக் கொண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றம், "இந்த நடுவர் மன்றத்தின் உத்தரவில் உள்ள எதுவும், எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கோ அல்லது இந்நடுவர் மன்றத்தின் உத்தரவிற்கு முரண்படாத வகையில் அம்மாநிலத்திற்குள் கிடைக்கும் நீரின் பயனை அடைவதற்கோ உள்ள உரிமை, அதிகாரம் அல்லது அதிகார வரம்பைப் பாதிக்காது" என்பதைத் தனது உத்தரவில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது".

ராஜ் பூஷன் சௌத்ரியின் பதிலின் சாராம்சம் - காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட காவரி மூலம் பயன்பெறும் எந்த மாநிலத்தின் அனுமதியும் தேவையில்லை.
ஏற்கெனவே மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்றிருக்கும் கர்நாடகா அரசுக்கு ராஜ் பூஷனின் பதில் மிக மிக தோதாக அமைந்துள்ளது.
உண்மையில், ராஜ் பூஷன் சொன்னதுபோல, காவிரி ஆற்றில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி தேவையில்லையா என்கிற கேள்வியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜனிடம் முன்வைத்தோம்.
"ராஜ் பூஷன் சௌத்ரி குறிப்பிட்டிருப்பது 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை. ஆனால், அணை விஷயத்தில் நாம் 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைத் தான் பார்க்க வேண்டும்.
காவிரி நீர் பாதைகள், அதன் பயன்பாடு, நீர் பங்கீடு, அணைக்கட்டுகள் ஆகியவற்றை ஆராய்ந்து காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது.
அந்தத் தீர்ப்பின் படி, கர்நாடகா ஆண்டுக்கு தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.

மேலும், அதன் 11 சரத்தின் படி, கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் எந்தக் கட்டமைப்பு பணிகள் செய்தாலும், அதன் மூலம் நீர் பங்கீட்டில் ஏதேனும் பிரச்னை வந்தால், அந்தக் கட்டமைப்புகளுக்கு கர்நாடகா அரசு கீழ் படுகை மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பில் உள்ள 192 டி.எம்.சி தண்ணீர் வழங்குதலை எதிர்த்து தான் கர்நாடகா அரசு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த முறையீட்டு தீர்ப்பில் கர்நாடகா ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு (2033-ம் ஆண்டு வரை) அமலில் இருக்கும் என்றும், இதில் எந்த மாநிலமும் மாற்றங்களைக் கோரி மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆக, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது முழுக்க முழுக்க நீர் பங்கீட்டை குறித்து தான்.

உச்ச நீதிமன்றம் கட்டுமானம் குறித்து தனது தீர்ப்பில் எதுவும் கூறவில்லை" என்று சொன்னவரிடம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதாக கூறுகிறார்களே என்று கேட்டோம்.
"அது வெறும் தகவலாக மட்டுமே இருக்கிறது. அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 2018-ம் ஆண்டிற்குப் பிறகு, காவிரி விஷயத்தில் எந்த மாநிலங்களின் அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தியது இல்லை.
இப்போதும் அது நடக்காது என்றே நம்புகிறோம்" என்று கூறி முடித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


