சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகம்; போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனக்கு நடந்த கொடுமையை கணவரிடம் கண்ணீர்மல்க கூறினார். உடனடியாக மனைவியை அழைத்துக் கொண்டு வேளச்சேரி காவல் நிலையத்துக்குச் சென்ற கணவர், நடந்தச் சம்பவத்தை புகாராக கொடுத்தார். அதன்பேரில் வேளர்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரின் பைக்கின் பதிவு நம்பர் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவர் தமிழக காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் மணிமாறன் என்று தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் மணிமாறன்

இவர் குடும்பத்துடன் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார். தற்போது ராணிப்பேட்டை போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறையின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு வேளச்சேரி போலீஸார் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து, `சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆதாரங்கள் இருந்தால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுங்கள் என வேளச்சேரி போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் மணிமாறனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் மணிமாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேளச்சேரி போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வேளச்சேரி போலீஸார் கூறுகையில், ``சென்னையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய மணிமாறன், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதனால் அவர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனால் ராணிப்பேட்டையிலிருந்து அடிக்கடி வேளச்சேரிக்கு இன்ஸ்பெக்டர் மணிமாறன் வந்துச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று இன்ஸ்பெக்டர் மணிமாறன், தன்னுடைய உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றிருக்கிறார். அப்போதுதான் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் மணிமாறன், இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இளம்பெண் அளித்த புகாரில் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.