ISSF உலகக் கோப்பை : இந்தியாவின் பதக்க வேட்டை; தங்கம் வென்ற ஈஷா சிங்... வெண்கலம் சேர்த்த மனு பாக்கர்!

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பை (ரைஃபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) துப்பாக்கிச் சுடுதல் தொடரில், இந்திய வீராங்கனைகள் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு, இரட்டை ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈஷா சிங், 40 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றார். சீனாவின் யூயூயே ஜாங் 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், ஈஷா 3 புள்ளிகள் முன்னிலையில் தங்கத்தை உறுதிப்படுத்தினார்.

மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான மனு பாக்கர், வடகொரியாவின் ஹியோன் கியோங் பாக் உடன் நடைபெற்ற பரபரப்பான இரட்டை ‘ஷூட்-ஆஃப்’ மோதலில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். கடைசி நொடிவரை நீண்ட இந்த மோதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஈஷா சிங், “முன்னதாக உலக சாதனை படைத்து தங்கம் வென்றிருந்ததால் இந்தப் போட்டியில் மன அழுத்தம் அதிகமாக இருந்தது. நீங்கள் உயர்ந்த நிலையை அடையும் போது, அந்தச் சாதனையைத் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் அதிகரிக்கும். அந்த அழுத்தத்தை வென்று மீண்டும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஹாங்சோ எனக்கு மிகவும் பிடித்த இடம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இங்கு நான்கு பதக்கங்கள் வென்ற நினைவுகள் இருப்பதால் இந்த மைதானம் எனக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது” என்றார்.

மனு பாக்கரும் தனது பதக்கம் குறித்து பேசுகையில், “இந்தப் பதக்கம் எனக்கு மிகவும் முக்கியமானது. இது அடுத்த கட்ட வெற்றிகளுக்கான அடித்தளமாக இருக்கும். என் ஆட்டத்தில் என்ன சிறப்பாக செயல்படுகிறது, இன்னும் எதை மேம்படுத்த வேண்டும் என்பதில் தெளிவை இந்தப் போட்டி கொடுத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல இந்த அனுபவம் மிகவும் உதவும்” என்று தெரிவித்தார்.

View this post on Instagram

A post shared by ISSF - International Shooting Sport Federation (@issf_official)

இந்த வெற்றியால் ஹாங்சோ உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சைன்யம் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் கணக்கைத் தொடங்கியிருந்தார்.

பதக்கப் பட்டியலில் தற்போது 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.

உலக சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக, இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.