Anbe Diana: யூடியூப் இல்லாமல் நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல! - கோபி
பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கும் அன்பே டயானா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரோஜா, ரம்யா ரங்கநாதன், சேத்தன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினர்.
இந்த நிகழ்வில் பரிதாபங்கள் கோபி பேசுகையில், "திரையரங்குகளுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
குறிப்பாக மொபைல் திரையில் இருந்து பெரிய திரைக்கு வர வேண்டும் என்பதைத்தான் உங்களில் பலரும் விரும்பினீர்கள்.
அதேபோல் சமூக வலைத்தளங்களில் அன்பே டயானா குறித்து தொடர்ந்து பேசி, படத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான விஷயம். இந்தப் படத்தின் வெற்றிக்குத் தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷின் பங்களிப்பு மிகப்பெரியது.
ஒரு நல்ல படத்தைத் தயாரிப்பது ஒரு கலை என்றால், அதைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய கலை. குட்நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை அவர் மக்களிடம் கொண்டு சென்ற விதத்தை நான் பார்த்திருக்கிறேன்.
அதே அர்ப்பணிப்புடன் அன்பே டயானா திரைப்படத்தையும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார். அதற்காக அவருக்கு என் பாராட்டுகள். இந்தப் படத்தில் நான் நடித்திருந்தாலும், இந்த வெற்றியின் முழு பாராட்டும் இயக்குநர் பாரி இளவழகனுக்கே சேர வேண்டும்.

அவர் எழுதிய கதையையும், உருவாக்கிய கதாபாத்திரத்தையும் நான் அவர் சொன்னபடி திரையில் கொண்டு வர முயற்சித்தேன். எங்களுக்கு யூடியூப் ஒரு விசிடிங் கார்டு போல இருக்கிறது. ஆனால், நேரடியாக சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல.
அதைவிட, இயக்குநராகத் தன்னை நிரூபிப்பது இன்னும் பெரிய சவால். அந்த சவாலை முழு அர்ப்பணிப்புடனும், சினிமா மீதான காதலுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கும் பாரி இளவழகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தப் படத்தின் மூலம் சினிமாவை அணுகும் விதம், கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளும் முறை என பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது" எனப் பேசினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

