நிர்வாணமாக்கி அடித்து வீட்டிலிருந்து துரத்தினார் - காமன்வெல்த் தங்கமகள் ஷர்மிளா அனுபவித்த கொடுமை
கிளாஸ்கோவில் நடந்து வரும் பாரா காமன்வெல்த் போட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா தடகளப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற முடியாமல் இருந்தது. அந்தக் குறையை ஹரியானாவைச் சேர்ந்த ஷர்மிளா தன்கர் (40) என்ற தடகள வீராங்கனை நிவர்த்தி செய்துள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் ஷர்மிளா இந்தியாவிற்காக குண்டு எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று 20 ஆண்டுகளாக முடியாத சாதனையைச் செய்திருக்கிறார்.
ஹரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ராலி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா, சித்ராலி கிராமத்திலிருந்து கிளாஸ்கோ சென்று பதக்கம் வென்றது வரை அவர் மேற்கொண்ட பயணம் மிகவும் சவாலானதாக இருந்தது. ஷர்மிளாவின் தந்தை விவசாயம் செய்து வந்தார். அவருக்குச் சொற்ப அளவில் நிலம் இருந்தது. இதனால் ஷர்மிளாவின் குடும்பம் வறுமையில் வாடியது.
அவரது தாயார் பார்வை சவாலுடையவராகவும், தந்தையை விட 20 வயது இளையவராகவும் இருந்தார்.
ஷர்மிளாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர் ஆவர். மூன்று பெண் குழந்தைகளில் ஷர்மிளா இரண்டாவது மகளாவார். கடைசி பெண் குழந்தை பிறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
வறுமையாலும் போதிய அளவு மருத்துவ வசதி கிடைக்காததாலும் ஷர்மிளாவிற்கு இரண்டு வயதில் போலியோ தொற்று ஏற்பட்டு இடது கால் செயல்படாமல் போனது. அதோடு வறுமை காரணமாக ஷர்மிளா 10வது வகுப்பு படித்து முடித்தவுடன் அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமண வாழ்க்கை மிகவும் கொடூரமாக அமைந்தது. இது குறித்து ஷர்மிளா கூற்கையில், அவர் மது அருந்துவார். போதைப்பொருட்களைப் பயன்படுத்துவார். நான் வயல்வெளிகளில் வேலை செய்தேன், கால்நடைகளையும் பராமரித்தேன். ஆனால், அதிலிருந்து கிடைத்த வருமானம் எதற்கும் போதுமானதாக இருக்கவில்லை.
அதோடு முதலில், அவர் கேட்ட வரதட்சணையை நான் கொண்டு வராததால் என்னை அடித்தார். பிறகு, இரண்டும் பெண் குழந்தைகளாகப் பிறந்ததற்காக என்னை அடித்தார்.
எனக்கு 26 வயதாக இருந்தபோது, அவர் என்னை அடித்து, அண்டை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி, என் இரண்டு மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேற்றினார். அப்போதுதான் என் பெற்றோர் என்னை மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்றார்.
அதன்பிறகு, அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பெண்கள் மருத்துவமனையில் பணிப்பெண்ணாகவும், துப்புரவுப் பணியாளராகவும், பாதுகாவலராகவும் பணியாற்றத் தொடங்கினார். ஊதியம் குறைவாக இருந்தபோதிலும், அது எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட தனக்கு உதவியதாக ஷர்மிளா கூறினார்.
அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருமணத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. 28-வது வயதில் அவர் மேற்கொண்ட இரண்டாவது திருமணம், அவரது முந்தைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.
அவரது கணவர் அஜித் சிங், அவரையும் அவரது மகள்களையும் ரேவாரிக்கு அழைத்துச் சென்று, பாரா விளையாட்டுக்களில் (மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்) ஊக்கப்படுத்தினார். அதன் மூலம்தான் இன்றைக்கு ஷர்மிளா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றது குறித்து ஷர்மிளா கூறுகையில், "எனது நாட்டிற்காக பதக்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் தேசத்திற்குப் பெருமை சேர்ப்பேன். இது எனது கனவு, என் அம்மாவின் கனவு. கடின உழைப்பின் மூலம் இந்தத் தங்கத்தை வென்றேன். எனது தாய்க்காக இந்தப் பதக்கத்தை வென்றுள்ளேன். நான் தொடர்ந்து ஆசிய விளையாட்டுகளில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


