CJP போராட்ட வெற்றிக்குப் பின்னால் இருந்த மூவர்! - யார் அந்த இளைஞர்கள்... அவர்களின் பின்னணி என்ன?
சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவை மற்றும் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் இளைஞர் இயக்கமாக உருவெடுத்திருக்கிறது.
வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்ததற்கு எதிராக எழுந்த இந்த இயக்கம், இரண்டே மாதங்களில் மில்லியன் கணக்கான இளைஞர்களை சமூக வலைதளங்களில் இருந்து போராட்டங்களில் ஒருங்கிணைத்திருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பிய இந்த இளைஞர்கள் இயக்கம், இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த அமைப்பின் வெற்றிக்கு பின்னால் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகிய இளைஞர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
அபிஜீத் திப்கே
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அபிஜீத் திப்கே தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர். 30 வயதான இவர் புனேவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் இதழியல் துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
தனது இதழியல் படிப்பின் போது, ஊடக நெறிமுறைகள் மற்றும் அரசியல் குறித்து ஆழமானப் புரிதலைப் பெற்ற இவர் 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியில் சமூக ஊடக உத்தி மற்றும் தேர்தல் பிரசாரத்திற்குப் பொறுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

தவிர 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது, இளம் வாக்காளர்களைக் கவர்வதற்கும் அரசியல் செய்திகளைப் பரப்புவதற்கும் மீம்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் பிரசாரத்தை வழிநடத்தியதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
அதன் பிறகு உயர்கல்விக்காக அமெரிக்காவுக்குச் சென்ற அபிஜீத் திப்கே, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத் துறையில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் நாட்டின் இளைஞர்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கரப்பான்பூச்சி என்ற விமர்சனத்தைத் தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பை தொடங்கி இந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
சௌரவ் தாஸ்
டெல்லியைச் சேர்ந்த சௌரவ் தாஸ் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் முதன்மை செய்தித் தொடர்பாளர். நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார்.
தனது 18-வது வயதிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) மிகத் திறம்படப் பயன்படுத்தி, அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய ரகசியங்களை வெளிக்கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக, தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நீதித்துறை வெளிப்படைத்தன்மை குறித்த இவரது RTI புலனாய்வுகள் இந்திய அளவில் பெருமளவில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

புகழ்பெற்ற பத்திரிக்கைகளில் மனித உரிமைகள் மற்றும் அரசு கொள்கைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது திறமையான புலனாய்வு எழுத்துக்காக சர்வதேச அளவில் மதிப்பிற்குரிய புலிட்சர் மையத்தின் மானியத்தொகையைப் பெற்றிருக்கிறார்.
Complicit Silence: The Courts Role in Indias Quiet Suffering என்ற புத்தகத்தையும் இவர் தற்போது எழுதி வருகிறார். தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக பத்திரிகை சந்திப்புகளில் மாணவர்களின் குரலாக ஒலித்தது மட்டுமன்றி, மத்திய கல்வித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடைபெற்ற அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அஷுதோஷ் ரங்கா
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஷுதோஷ் ரங்காவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி கான்பூரில் பி.டெக் பட்டம் பெற்று, பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
சர்வதேச முன்னணி ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியில் ஆலோசகராகப் பணியாற்றி, உலகளாவிய நிறுவனங்களுக்குப் பொருளாதார மற்றும் செயல்பாட்டு உத்திகளை வகுத்துக் கொடுத்த அனுபவம் பெற்றவர். கார்ப்பரேட் வாழ்க்கையைத் தாண்டி பொதுச் சேவையில் ஆர்வம் கொண்ட இவர், முன்னதாக ஆம்ஆத்மி கட்சியிலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

2025-இல் இந்தியா திரும்பிய இவர், தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் இளைஞர் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தி இருக்கிறார்.
தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்த அஷுதோஷ் ரங்கா நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தை வியூகரீதியாகவும் வழிநடத்தி இருக்கிறார்.
இப்போராட்டத்தின் போது மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரை நேரில் சந்தித்து மாணவர்களின் கோரிக்கைகளை வலுவாக முன்வைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


