முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது! - அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!
ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கூட்ட அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் வினோத், ஆனந்த், செங்கோட்டையன், வெங்கட்ராமன், ஸ்ரீநாத், விஜய் பாலாஜி, கமலி போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகம் முழுவதுமிருந்து விவசாயிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கான மானியங்கள், கடன் தள்ளுபடி போன்றவை குறித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்தக் கூட்டத்தில்தான் முதல்வர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று மேகதாது விவகாரம் குறித்துப் பேசுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்வில் கிட்டத்தட்ட 41 விவசாயிகள் பேசியிருக்கின்றனர். இதில், பெரும்பாலானோர் முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

`உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே பேச்சுவார்த்தைக்கு எதிராக இருக்கிறது. அப்படியிருக்க எதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? சிவகுமார் அங்கே அழைத்து நம்முடைய மனதை கரைக்கத்தான் நினைப்பார். மேலும், முதல்வர் கர்நாடகா செல்வதாக தகவல் வெளியான பிறகும்கூட, அங்கே தமிழ்நாடுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எதற்காக பேச வேண்டும்? நாம் சட்டரீதியாகத்தான் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.
ஒரு சிலர் மட்டும் பழைய விவகாரங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல் முதல்வர் கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறியிருக்கின்றனர்.
உங்களின் கருத்துகளை முதல்வரிடம் கொண்டு சேர்க்கிறோம் என அமைச்சர்களும் உறுதியளித்திருக்கின்றனர்.
முன்னதாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி மேகதாது விவகாரம் தொடர்பாகப் பேச முதல்வர் விஜய் கர்நாடகா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


