சீர்காழி: த.வெ.க கொடி கலருக்கு மாறிய போலீஸ் நிழற்குடை - எதிர்ப்பு கிளம்பியதால் அகற்றம்!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் நிழற்குடை இருந்தது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் டிராபிக் போலீஸார் பயன்படுத்துவதற்காக இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையில் இருந்தபடி போலீஸார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்கு செய்யும் பணியினை மேற்கொள்வார்கள். அந்த நிழற்குடையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. நகைக்கடை உரிமையாளர் ஒருவர் இதை புதுப்பிப்பதற்கான ஸ்பான்சர் செய்ததுடன் நகை கடை பெயரையும் நிழற்குடையில் எழுதி விளம்பரம் செய்யப்பட்டது.
காவல் நிலையம், காவல் நிழற்குடை உள்ளிட்டவற்றுக்கு வழக்கமான கலர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சீர்காழியில் நிழற்குடைக்கு தவெக கட்சியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீஸ் நிழற்குடைக்கு ஆளுங்கட்சியான தவெக கட்சிக் கொடியின் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்தனர். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இது குறித்து விமர்சித்து பதிவிட சர்ச்சையானது.
இந்நிலையில், தவெக கட்சி கலர் கொடி பயன்படுத்தி பெயின்ட் அடித்து புதுப்பிக்கப்பட்ட அந்த நிழற்குடை உடனடியாக அகற்றப்பட்டது. தற்போது நிழற்குடை இருந்த இடம் காலியாக உள்ளது. பொதுவாக எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சி நிர்வாகிகள் தங்கள் தலைமையின் கவனத்தைப் பெறுவதற்காக வித்தியாசமாக எதாவது செய்வார்கள்... சமயத்தில் அது சிக்கலில்கூட முடியும்.

அந்த வகையில் போலீஸார் ஆளுங்கட்சியை திருப்திபடுத்துவதற்காக கட்சி கலரை போலீஸ் நிழற்குடைக்கு அடிக்க வைத்துள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துடன் இது செயல்படுத்தப்பட்டதா கீழ் நிலையில் உள்ளவர்கள் தன்னிச்சையாகச் செய்தார்களா என்று தெரியவில்லை என்கிறார்கள். பெயின்டர் பல கலர்கள் கொண்டு வந்த நிலையிலும் தவெக கலரை அடியுங்கள் என சில போலீஸார் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி பகுதியில் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


