சொந்த நாட்டு மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம்.! - மாணிக்கம் தாகூர்

"டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இதுவே அமெரிக்காவாக இருந்தால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும்" என்று தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி பேசியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால், அவர்களைச் சுட்டுக் கொன்றிருப்பார்கள்” என்று தனது மனதிலுள்ள உண்மையான எண்ணத்தை வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி

தேசவிரோதிகள் ஆக்கப்படுகிறார்கள்

இது ஏதோ தற்செயலாக வந்த வார்த்தை அல்ல.

இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உலகப் பார்வையையே வெளிப்படையாக உணர்த்துகிறது.

அதாவது, மக்களாட்சியில் மாற்றுக்கருத்து என்பது அதன் உயிர்நாடி அல்ல. மாறாக, அது துப்பாக்கித் தோட்டாக்களால் தீர்க்கப்பட வேண்டிய ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதே அது.

தங்கள் எதிர்காலத்தையே சீரழித்த வினாத்தாள் கசிவைக் கண்டித்துத் துயரத்துடன் போராடும் மாணவர்கள், இந்த அரசால் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்கும் கணத்திலேயே தேசவிரோதிகள் ஆக்கப்படுகிறார்கள்.

ஒரு நாட்டை நம்பி ஒப்படைக்க முடியாது

திருவள்ளுவர் சொல்லியுள்ளார்...

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்”

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிக்கும் சிறந்த வழி, அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிட்டு அவ்வளவோடு அதை மறந்துவிடுதலாகும்.

ஆனால், துயரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அளிக்கும் பதில் இதற்கு முற்றிலும் மாறானது. அவர்களை அவமானப்படுத்துவது, குற்றவாளிகளாகச் சித்தரிப்பது மற்றும் அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட விரும்புவது.

சொந்த நாட்டின் மாணவர்களுடனேயே ஆரோக்கியமாக விவாதிக்க முடியாத ஒரு கட்சியிடம், ஒரு நாட்டை நம்பி ஒப்படைக்க முடியாது". என்றிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.