சர்வதேச மீடியாவின் கவனத்தை ஈர்த்த போராட்டம்; பிரதானை இழக்க பாஜக சம்மதிக்கக் காரணமான 72 மணிநேர கெடு
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
மாணவர்களின் பிரதான கோரிக்கையான மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்பதை கடைசி நேரத்தில் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
மாணவர்களின் பிரதிநிதிகளோடு மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நடத்திய மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தையிலும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்தனர். இது குறித்து இரண்டு அமைச்சர்களும் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தெரிவித்தனர்.
அதோடு இப்போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வந்தது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி, மாணவர்களின் மெழுகுவர்த்தி பேரணி, மாணவர்கள் டெல்லி தெருக்களில் வலம் வந்தது, சாலைகளில் படுத்து உறங்கியது என அனைத்து நிகழ்வுகளையும் சர்வதேச மீடியாக்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வந்தன.
இது மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. தேவையில்லாமல் போராட்டம் சர்வதேச அளவில் பேசப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் தர்மேந்திர பிரதானை பா.ஜ.க ராஜினாமா செய்ய சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதே போன்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த செய்திக்கும் சர்வதேச மீடியா அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தப் போராட்டங்களும் பிரதானின் ராஜினாமாவும் அவருக்கு ஒரு பெரும் அரசியல் சவாலாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தது.
மேலும் பொதுமக்களின் போராட்டங்களுக்குப் பணிய மறுக்கும் குணம் கொண்டவர் என்று அறியப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், பிரதானின் இந்த ராஜினாமா ஒரு ஆச்சரியமான நிகழ்வு என்று அந்தச் செய்தி நிறுவனம் வர்ணித்துள்ளது.
சி.என்.என். செய்தி நிறுவனம் தர்மேந்திர பிரதான் ராஜினாமா தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி பொதுவாக தெருப் போராட்டங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் தலைவராகக் கருதப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பிரதானின் ராஜினாமா அவருக்கு ஒரு அரிதான மற்றும் வளர்ந்து வரும் சவால் என்று குறிப்பிட்டது.
நீட் தேர்வுத்தாள் கசிவுகள் என்ற பிரச்னைக்கு அப்பாற்பட்டு, இளம் பட்டதாரிகளிடையே நிலவும் ஆழமான பொருளாதாரக் கவலைகள் மற்றும் வேலையின்மை பிரச்னை இந்தப் போராட்டங்களில் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
பி.பி.சி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் மக்கள் போராட்ட வரலாற்றின் பின்னணியை வைத்துப் பார்க்கையில், சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் தலைமையில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாகத் தற்போது நடந்த மாணவர் போராட்டம் இருந்தது என்று வர்ணித்தது.
மேலும் காக்ரோச் ஜனதா கட்சி மாணவர்களை ஒருங்கிணைத்த விதத்தையும் பிபிசி வெகுவாகப் பாராட்டியது.
பணிய வைத்த 72 மணி நேர கெடு
மத்திய அரசு எப்படியும் தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தது. ஆனால் மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தையில் காக்ரோச் கட்சினர் தர்மேந்திர பிரதான் 72 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யவில்லையெனில் மீண்டும் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவோம் என்று கெடு விதித்தனர்.

இதனை ஜெ.பி.நட்டா உடனே அமித் ஷாவிடம் எடுத்துக்கூறினார். மீண்டும் மாணவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினால் அது அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், அதுவே பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையாக மாற வாய்ப்பு இருப்பதாகக் கருதி தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய பா.ஜ.க சொன்னதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

