’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!
கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் திறத்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நம் பகுதியில் எடுக்கப்படக்கூடிய கழிவுநீரை, அந்த பகுதியில் சுத்தகரிக்க போகின்றோம். இதில் அப்பகுதி மக்களுக்கு எந்த இடையூறும் கிடையாது.வேறு மாவட்டத்திற்கோ, வேறு மாநிலத்திற்கோ இதை கொண்டு செல்ல முடியாது. அந்தந்த பகுதியில் உள்ள கழிவுநீரை அந்தந்த பகுதியில் சுத்திகரிப்பது மட்டும் தான் சரியாக இருக்க முடியும். ஒரு சிலர் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டகோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்க விவகாரத்தில், எந்த அரசியல் அழுத்தமும் கிடையாது. 54 பணியாளர்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உத்தரவில் என்ன சொல்லி இருக்கிறதோ அது செயல்படுத்தப்படும். அது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. செம்மொழி பூங்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் கூறியது தொடர்பான ஆதாரங்கள் கேட்டு இருக்கின்றோம், அது சரியாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும்” என்றார்.
திரையரங்கில் ஜனநாயகன் படத்திற்கு கண்ணீர் விட்டது குறித்த கேள்விக்கு, “எல்லோரும் மனிதர்கள் தான், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை உங்களிடம் தான் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. 30 ஆண்டுகளாக ரசிகர்களாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள், இனிமேல் திரையரங்கில் பார்க்க முடியாது என்ற ஆதங்கத்தில் எங்களை மீறி எமோஷன் வெளிபட்டுவிட்டது. இந்த விமர்சனங்களில் நானும் இருக்கிறேன். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சித்தோம். இதை அரசியலாக்க வேண்டிய அவசியம் த.வெ.க-விற்கும் இல்லை, அமைச்சர்களுக்கும் இல்லை. இதை அரசியல் செய்ய தேவையில்லை, மக்கள் பணி செய்து எங்களின் இருப்பை காட்டினால் போதும் என நாங்கள் நினைக்கிறோம்” என்றார். அம்பேத்கர் சிலை கோவை மாநகரில் இன்னும் வைக்கப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, “இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நல்லதே நடக்கும்” என பதிலளித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
