1997 வினாத்தாள் கசிவு: `அன்று போராளி, இன்று.? - தர்மேந்திர பிரதான் கடந்து வந்த பாதை!
நீட் வினாத்தாள் கசிவு, அரசு தேர்வுகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய கல்வித்துறை மீது கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், டெல்லி ஜந்தர் மந்தரில் 30 நாள்களைக் கடந்தும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த CJP நிறுவனர் அபிஜித் தீப்கே, ``ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக இளம் வயதில் தர்மேந்திர பிரதான் குரல் கொடுத்தது உண்மையென்றால் அவர் ஜந்தர் மந்தரில் எங்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நினைக்கிறேன். அவரை நாங்கள் வரவேற்போம். அவருடைய ராஜினாமா கடிதத்தையும் நாங்களே தயார் செய்து தருகிறோம். அவர் கையெழுத்திட்டால் மட்டும் போதும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இளம் வயதில் தேர்வுதாள் கசிவுக்கு எதிராக களமாடியிருக்கிறார் என்ற செய்தி பரவலாக சமூக ஊடகங்களில் வைரலானது. அது தொடர்பான தகவல்களை ஆர்.எம்.டி பட்டப்படிப்பு கல்லூரியின் முதல்வர் பிரசாந்த் ரவுத் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியிடம் பகிர்ந்திருக்கிறார். அவர் அளித்திருந்த பேட்டியில், ``1997-ம் ஆண்டு ஒடிசாவின் உத்கல் பல்கலைக்கழகத்தில் தர்மேந்திர பிரதான் படித்துக்கொண்டிருந்தபோது, நான் அவருக்கு ஜூனியர்.
அந்த சமயத்தில் தர்மேந்திர பிரதான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ABVP-யின் தேசியச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். மேலும் பா.ஜ.க-வில் முறைப்படி இணையவிருந்தார்.
அப்போதுதான் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. அதை எதிர்த்து தர்மேந்திர பிரதான், நான் உட்பட மாணவர்களான நாங்கள், தலைமை செயலகத்திற்கு முன்பாக ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். அங்கு சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர். போராட்டம் அமைதியாக நடைபெற்றபோதே, காவல்துறை தாக்குதல் நடத்தியது. நாங்கள் மிகவும் பயந்திருந்தோம். அந்த நேரத்தில் தர்மேந்திர பிரதான் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்குச் சில எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன.

நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அரசியல் போட்டிகள் காரணமாகக் கல்லூரி வளாகத் தேர்தல்கள் அவ்வப்போது வன்முறையாக மாறியிருக்கிறது. ஒரு தேர்தலில் தர்மேந்திர பிரதான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்பது தெரிந்ததும், ஜனதா தள ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நபர்களால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்ததையே நாங்கள் அதிசயமாக கருதினோம்." என்றார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர் அரசியலில் ஈடுபட்டதே அவர், பா.ஜ.க-வில் ஒரு வலுவான தலைவராக உருவெடுக்க அடித்தளமாக அமைந்தது. ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5 முறை கோலோச்சிய காலகட்டத்தில் பா.ஜ.க ஒடிசா மக்களிடம் எடுபடவே இல்லை. அந்தச் சூழலிலும் பல ஆண்டுகளாகப் பா.ஜ.க-வின் அமைப்பியல் பலத்தைப் பெருக்கவும், கட்சியின் கிளைகளை விரிவாக்கவும் தர்மேந்திர பிரதான் முக்கியப் பங்காற்றினார்.
அதேநேரம் ஒடிசாவில் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகமாக இருந்த ராஜ் கிஷோர் தாஸ், சுபாஷ் சௌஹான் போன்றவர்கள் 2019-ல் கட்சியிலிருந்து விலகினார்கள். அப்போது அவர்கள் அளித்த பேட்டிகளில், ``தர்மேந்திரப் பிரதானைவிட நாங்கள் வளர்ந்துவிடக் கூடாது என அவர் கருதுகிறார். எங்கள் வளர்சியைப் பிடிக்காமல் எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்." என பகிரங்கமாக போட்டுடைத்தனர்.
அதன் பிறகும் தர்மேந்திர பிரதானுக்கே பா.ஜ.க தலைமை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது. இவருடைய இந்த நீண்டகால முயற்சிக்கு 2024 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியும் கிடைத்தது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தின் ஆட்சியை வீழ்த்தி, ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜ.க தனது சொந்த ஆட்சியை நிறுவியது. ஒடிசா மாநிலத்தின் பா.ஜ.க-வின் முகமாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட தர்மேந்திர பிரதான், முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜியை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைத்தது பா.ஜ.க தலைமை.
பழங்குடியினத்திலிருந்து முதல்வரை தேர்வு செய்ததின் பின்னணியில், அந்த மக்களின் ஆதரவை தக்க வைப்பது ஒருபுறம் என்றாலும், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக ஒடிசா பா.ஜ.க-வில் இருந்த புகைச்சலே அவரை முதலமைச்சராக நியமிக்காதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதே நேரம் அவருக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையில் மத்திய அமைச்சரவையில், அதுவும் முக்கியத்துறையான கல்வி அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
1997-ல் ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடிய இளம் தர்மேந்திர பிரதான், இன்று மத்திய கல்வி அமைச்சராக அதே மாணவர்களின் ஆத்திரத்துக்கு மத்தியில் நிற்கிறார். வரலாறு விசித்திரமான முரண்களை உருவாக்குகிறது.

அதேநேரம், அநீதிக்கு எதிராக குரலெழுப்பிய மாணவர் என்பதிலிருந்து தேசிய அரசியலுக்கு உயர்ந்த ஒருவர் `தனது கடந்த காலத்தை நினைவில் கொள்ளாமல் ஏன் முரண்பாடுகளின் உருவமாக வலம் வருகிறார்கள்? என்றக் கேள்வியையும் எழுப்புகிறது.
இன்று ஜந்தர் மந்தரில் 30 நாட்களுக்கு மேலாகத் தொடரும் போராட்டம், அரசியல் சதுரங்கத்துக்கு அப்பாற்பட்டது. அதைப் பாதுகாக்கும் பொறுப்பு, அனைத்து அமைச்சர்களுக்கும், குறிப்பாகக் கல்வி அமைச்சருக்கு தவிர்க்க முடியாத கடமையாகும்.
நீதிக்காகக் குரல் கொடுத்த இளைஞன், இன்று கல்வித் துறையின் பொறுப்பில் இருக்கும் போது, அதே நீதியை உறுதிப்படுத்த முன்வருவாரா? அல்லது அரசியல் யதார்த்தங்கள் அவரை மாற்றிவிட்டனவா? என்பதை இனிவரும் நாட்களில் தர்மேந்திர பிரதானின் செயல்பாடுகளிலும், மத்திய அரசின் அணுகுமுறையிலும் பதில் கிடைக்கும் என நம்புவோம்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

