நீட் போராட்டம்: உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? - டெல்லி பல்கலைகழகத்திற்கு ராகுல் கண்டனம்
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரகணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராடும் மாணவர்களுக்கு டெல்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதாவது, "மாணவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தப்படும் சட்டவிரோதமான கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள், மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதோடு, அவர்களின் கல்வி வளர்ச்சியையும் எதிர்கால வேலைவாய்ப்புகளையும் கடுமையாகப் பாதிக்கலாம்.
எனவே, அனைத்து மாணவர்களும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களின் பாதுகாப்பிற்கும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலும், இந்தச் சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக அதிகளவில் போலியான மற்றும் தவறான தகவல்கள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதால், அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்" என்று தெரிவித்திருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். "ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் மாணவர்களை மிரட்டுவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், காலம் வரும்போது இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். உங்களைத்தான் பொறுப்பாக்குவார்கள்" என்று தனது எக்ஸ் தளப்பதிவு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


