தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோல்விகளை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும், டி20 சர்வதேச போட்டிகளில், கேப்டனாக தான் கலந்துகொண்ட முதல் எட்டு போட்டிகளிலுமே தொடர்ச்சியாக டாஸ் வென்ற உலகின் முதல் கேப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இதன் மூலம் பஹாமாஸ் அணியைச் சேர்ந்த கிரிகோரி டெய்லரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்திய கேப்டன்களை பொறுத்தவரை, இதற்கு முன்பு எம்.எஸ். தோனி டி20 போட்டிகளில் அதிக முறை தொடர்ச்சியாக டாஸ் வென்ற சாதனையை வைத்திருந்தார். தோனி மே 2010 முதல் பிப்ரவரி 2012 வரை இந்திய டி20 கேப்டனாகத் தொடர்ந்து ஏழு முறை டாஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹராரேயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். மயங்க் யாதவ் (2/18) மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர் 126 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கித் களமிறங்கிய இந்திய அணியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். இவரின் அதிரடி ஆட்டம் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

