Ban NEET போராட்டம்: ``அனிதாவின் அண்ணனாகத்தான் தலைமைச் செயலகம் முன்பு நின்றேன் - பாடகர் அறிவு

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய பாடகர் அறிவு, ``மாணவர்களுக்குத் தேர்வு, ஆசிரியர் மற்றும் பாடத்திட்டத்தைப் பார்த்துக் குழப்பமும் பயமும் ஏற்படுவது மிக இயல்பானது. இந்த பயத்தைப் போக்குவதற்காகவே பெற்றோர்கள் பள்ளிகளில் கட்டணம் செலுத்துகிறார்கள்.

ban neet protest - Neelam

ஆனால், மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளைப் பார்த்துப் பயந்து, அதை வெளியிலும் சொல்ல முடியாமல் சகித்துக் கொண்டிருந்த ஒரு தலைமுறை, இன்றைக்கு வெடித்து எழுந்து நீட் எதிர்ப்புப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சமமாக இல்லாத ஒரு சமூகத்தில் அனைவருக்கும் சமமான தேர்வு என்பது சாத்தியமற்றது. முதல் குழந்தை இறந்தபோதே அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளித்திருந்தால், நூற்றுக்கணக்கான மாணவர்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.

அனிதா 10 ஆண்டுகளுக்கு முன்பாக நம்மிடம் எழுப்பிய கேள்விக்கு இன்றைக்கு வரைக்கும் நம்மிடம் பதில் இல்லை. இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கும் போராட்டம் அனிதாவின் போராட்டமே. அனிதாவின் அண்ணனாகதான் தலைமைச் செயலகத்தின் முன் போய் நின்றேன். சட்டம், அரசு, அரசியலமைப்பு அனைத்துமே மக்களுக்கானது என்ற அடிப்படை புரிதல் கூட இந்த அரசாங்கத்திற்கு இல்லை. அரசையோ, அரசியல்வாதிகளையோ நம்பி முறையிடுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதால், மக்களுடன் மக்களாக நின்று மக்கள் அமைப்பாகப் போராடுவதே தீர்வாகும்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

நாம் நீட் தேர்வில் இருந்து மட்டுமல்லாமல், புதிய கல்விக் கொள்கையிலிருந்தும் (NEP) வெளியே வர வேண்டும். முற்காலத்தில் குறிப்பிட்ட சாதியினர் படிக்கக் கூடாது என நேரடியாகத் தடுத்த நிலை மாறி, இன்றைக்கு மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டதால் தேர்வு என்ற பெயரில் மறைமுகமாக மாணவர்களைத் தடுக்கப் பார்க்கிறார்கள். மற்றொருபுறம், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஆசிரியர்களே வேலைக்காகப் போராடும் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே, கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவைப்படுகிறது.

நீளம் பண்பாட்டு மையம், காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் இந்தியா முழுமைக்கும் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கலை வடிவத்திலும் நேரடிப் போராட்டத்திலும் முழு ஆதரவுடன் இயங்குவேன். நமது எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களை சரியாகப் பாதுகாக்கும் போதுதான் ஒரு நல்ல நாடு கிடைக்கும். எனவே, கல்வித்துறையின் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக இந்த போராட்டம் அமைய வேண்டும்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.