Ban NEET போராட்டம்: `அரசியல் கட்சிகளோ தலைவர்களோ காப்பாற்றுவார்கள் என நம்பக் கூடாது- இயக்குநர் அமீர்

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய இயக்குநர் அமீர், ``நீட் தேர்வு குறித்துப் பேச வந்த பலருக்கு அதைப்பற்றிய தொழில்முறை அறிவு இல்லாவிட்டாலும், நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் சிந்தனையும்தான் அனைவரையும் இங்கு ஒன்று சேர்த்துள்ளது.

ban neet protest - Neelam

அனிதாவின் மரணத்தில் தொடங்கிய அந்த ஓலம் இன்றுவரை ஓயவில்லை. `எங்களிடம் நீட்டைத் தடுப்பதற்கான ரகசியம் இருக்கிறது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களும் அதைச் செய்யவில்லை. அனிதாவின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியவர்களும் அதைத் செய்யவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல்வாதிகள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முற்றிலும் ஏமாற்று வேலை. கோடிக்கணக்கான உறுப்பினர்களும் வாக்குகளும் வைத்துள்ளதாகக் கூறும் எந்தவொரு அரசியல் கட்சியும், இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை. அவர்களுக்கு அரசியல் என்பது வெறும் பிழைப்புவாதமாக மட்டுமே இருக்கிறது.

மக்களைத் தொடர்ந்து சிந்திக்கவிடாமல், மதம், சாதி அல்லது கவர்ச்சிகரமான பிற விஷயங்களை வைத்துத் திசைதிருப்பும் வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. அதேபோல, `நாங்கள் வன்முறையைக் கையிலெடுக்க மாட்டோம், சாத்வீகமாக மட்டுமே போராடுவோம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது ஆபத்தானது. சொந்த வீட்டுக்குள் கருநாகம் நுழையும் போது தற்காப்புக்கு எதிர்த்து நிற்பது வன்முறை அல்ல. அடங்க மறு, அத்துமீறு, திமிரி எழு, திருப்பி அடி. எங்களைப்போன்ற போராட்டக்காரர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்கள், அநீதியை எதிர்த்து நிற்கத் தயங்காதவர்கள்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறையும், துணை ராணுவமும் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் மிகக் கொடூரமானவை. அவர்கள் எந்தவித ஆயுதமும் இன்றித் தங்கள் உரிமையைக் கேட்கவே வந்திருக்கிறார்கள். தங்களைப்போலவே தேர்வு எழுதித் தகுதியோடு வர நினைக்கும் மாணவர்களின் வலியை அதிகாரிகள் உணர்வதில்லை. பெண்களிடம் கூட மிகக் கேவலமாக நடந்துகொள்ளும் போக்குக் கண்டிக்கத்தக்கது.

போராடுபவர்களிடம் எந்த ஆயுதமும் இருப்பதில்லை. கலவரத்தை தடுக்க வரும் காவல்துறைதான் ஹெல்மெட் போட்டு, தடியுடன், கண்ணீர் புகைகுண்டுடன் வருகிறது. ராகுல் காந்தியின் போராட்டத்தை மதிக்கிறோம். ஆனால் அவர் கட்சி ஆளும் கேரளாவில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். நாட்டின் ஊடகங்கள் மக்கள் பிரச்னைகளையும், மாணவர் போராட்டங்களையும் முக்கியச் செய்தியாகப் போடுவதற்குப் பதிலாக, திரைப்படங்களின் வசூல் சாதனைகளையே முக்கியச் செய்திகளாக்குகின்றன. தங்களுக்கு மேல் அதிகாரிகள் சொல்கிறார்கள் என்பதற்காக ஊடகங்களும் காவல்துறையினரும் தங்களின் சொந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிந்தித்துப் பார்க்காமல் செயல்படுகிறார்கள்.

ban neet protest - Neelam
ban neet protest - Neelam

காவல்துறை நண்பர்கள், மேலதிகாரிகள் சொன்னாலும் போராடும் எளிய மாணவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாதீர்கள். எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அமைச்சரையோ இதுவரை தாக்கியிராத காவல்துறை, எளிய மக்களை மட்டுமே தாக்குவது ஏன்? சாதி, மத ஊர்வலங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதைப் போல, நாட்டின் ஜனநாயக உரிமையைக் கேட்டுப் போராடும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமையல்லவா?

நம்முடைய அடுத்த தலைமுறையை மக்களாகிய நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகளோ அல்லது தலைவர்களோ காப்பாற்றுவார்கள் என்று நம்பக் கூடாது. அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள், ஆட்சிக்கு வந்ததும் மாறிவிடுவார்கள். நான் எந்தக் கட்சிக்கும், விஜய்க்கும் அல்லது தனிநபருக்கும் எதிரானவன் அல்ல. அராஜகம் மற்றும் அநீதி செய்யும் அரசுக்கு எதிரானவன், மக்களுக்கு ஆதரவானவன்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.