சுற்றுச்சுவர் இல்லா பள்ளி: கோயில் திருவிழாவுக்கு இடையூறா? - பாதுகாப்பின்றி கல்வி கற்கும் குழந்தைகள்!

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 74-க்கு உட்பட்ட பனைமரத்தூரில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்பப் பள்ளியில், எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 47 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், பள்ளியில் பல அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன.

பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை, உணவறை மற்றும் வகுப்பறை என மொத்தம் மூன்று அறைகள் மட்டுமே உள்ளன. அதே இடங்களிலேயே கல்வி நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் இணைப்பாட செயல்பாடுகள், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த போதுமான இடவசதி இல்லாததும் பள்ளி நிர்வாகத்துக்கு சவாலாக உள்ளது.

இந்தப் பள்ளி பிரதான சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், சுற்றுச்சுவர் இல்லாத நிலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கேள்விக்குறியாக்கியுள்ளது. காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தும் போது அதிக வெயில் மாணவர்களை பாதிப்பதாகவும், பாதுகாப்பான விளையாட்டு இடம் இல்லாததால் குழந்தைகள் சுதந்திரமாக விளையாட முடியாத நிலையும் காணப்படுகிறது.

இந்தப் பிரச்னையின் பின்னணியில் கிராமத்தின் மத மற்றும் பாரம்பர்ய அம்சங்களும் உள்ளன. பள்ளி மைதானம் அமைந்துள்ள பகுதி, ஊர் பொதுக் கோயிலின் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும் இடமாக இருந்து வருவதால், அங்கு நிரந்தர சுற்றுச்சுவர் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊர் தலைவர் கூறுகையில், “பள்ளி அமைந்துள்ள இடம் முற்காலத்தில் ஊர் கோயிலுக்குச் சொந்தமானது. அங்கு இருந்த சிறிய கோயில்கள் அகற்றப்பட்ட பின்னரே பள்ளிக்கான இடம் வழங்கப்பட்டது. மேலும், மகா மாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழைமையானது.

அதன் பாரம்பர்ய சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் காலங்காலமாக பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் நிரந்தர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால், கோயில் திருவிழாக்கள் மற்றும் பாரம்பர்ய நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிரமம் ஏற்படும்” என்றார்.

இதனால், ஒரு புறம் குழந்தைகளின் பாதுகாப்பும் கல்வி சூழலும்; மறுபுறம் கிராம மக்களின் சமய மற்றும் பாரம்பர்ய உரிமைகளும் நேருக்கு நேர் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டபோதிலும் , இந்தப் பிரச்னையினால் அது பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, கூடுதல் கல்விச் செயல்பாடுகளுக்கான இடவசதி மற்றும் ஊர் மக்களின் பண்பாட்டு பாரம்பர்யம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, இரு தரப்புக்கும் ஏற்ற மாற்றுத் தீர்வை அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்பதே தற்போது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கிராம மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.