Human fridge: வெப்ப அலையைச் சமாளிக்க ஜப்பான் கண்டுபிடித்த மனித ஃப்ரிட்ஜ் - இது உண்மையா?
ஜப்பான் எப்போதுமே வித்தியாசமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன நாடு. இந்த ஆண்டு ஜப்பானில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப மயக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏசி, மின்விசிறி போன்ற வழக்கமான சாதனங்கள் பொது இடங்களிலும் திறந்தவெளிகளிலும் வேலை செய்பவர்களுக்குப் பயன்படாது. இதைக் கருத்தில் கொண்டு, மனிதர்களை விரைவாகக் குளிர்விப்பதற்காகவே ஒரு பிரத்யேகமான கூல் கேபினை, SDRS, ட்ருஸ்கோ ஆகிய ஜப்பானிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
டோ ஹியெமன் பாக்ஸ் (Do Hiemon Box) என அழைக்கப்படும் இந்தச் சாதனம், 7 அடி உயரமும், துருப்பிடிக்காத எஃகு மற்றும் கண்ணாடிக் கதவுகளாலும் ஆன ஒரு பெட்டி போன்ற அமைப்பு.
அதிக வெயிலில் வேலை செய்துவிட்டு வருபவர்கள், இந்தப் பெட்டிக்குள் சென்று உட்கார்ந்தால் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் உடல் முழுமையாகக் குளிர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். பெட்டியின் உள்ளே ஒட்டுமொத்த வெப்பநிலையானது 15°C ஆகப் பராமரிக்கப்படும். அதே சமயம், தலை, கழுத்து, தோள்பட்டை, முதுகுப் பகுதிகளில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று நேரடியாக வீசும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஒருவேளை பெட்டிக்குள் இருப்பவர் தூங்கிவிட்டாலோ அல்லது அதிக நேரம் உள்ளே இருந்தாலோ, உடலின் வெப்பநிலை அபாயகரமான அளவிற்குக் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, 20 நிமிடங்களில் தானாகவே அணைந்துவிடும் (Auto Shut-off) சென்சார் வசதியைக் கொண்டுள்ளது.
வழக்கமான ஏர் கண்டிஷனர்களை விட இது பாதி அளவு மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. இதை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு இந்திய மதிப்பில் தோராயமாக 9.5 ரூபாய் மட்டுமே செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடிப்பகுதியில் சக்கரங்களைக் கொண்டிருப்பதால், எங்கு வேண்டுமானாலும் எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.

இந்த மனித ஃப்ரிட்ஜ் பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், இதன் அடிப்படை நோக்கம் மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைகளில் அதிக வெப்பத்திற்கு இடையே வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வெயிலில் விவசாயம் செய்பவர்கள் ஆகியோரை வெப்பப் பக்கவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஜப்பானின் சில அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கட்டணமின்றி மக்கள் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதை இயக்குவதற்கான மின்கட்டணம் குறைவு என்றாலும், இந்த இயந்திரத்தின் விலை மிகவும் அதிகம். ஒரு மனித ஃப்ரிட்ஜின் விலை சுமார் 15 லட்சம் ஜப்பானிய யென் (அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 8 லட்சம் ரூபாய்.
"பூமி அதிக அளவில் வெப்பமயமாகிக் கொண்டே செல்வதால், அதிலிருந்து தப்பிக்க நாமும் ஒரு பெரிய ஃப்ரிட்ஜுக்குள் சென்று உட்கார்ந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என சமூக வலைதளங்களில் பலரும் இந்தச் செய்தியைக் கண்டு வேதனைப்பட்டாலும், தொழிலாளர்களின் உயிரைக் காக்க இந்த இயந்திரம் ஒரு சிறந்த தொழில்நுட்பத் தீர்வாக அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

