”ரத்து செய்யப்பட்ட பவரில் நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்”- பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்கியம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குக் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் பவர் (அதிகாரப் பத்திரம்) அளித்திருந்தார். பின்னர், மூன்று மாதங்கள் கழித்து அந்தப் பவரை அவர் ரத்து செய்துவிட்டார்.

நிலத்தை மீட்க தீகுளிக்க முயன்ற நித்யா

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரத்தைப் பயன்படுத்தி ராஜேந்திரன் அந்த நிலத்தைத் தனது மனைவி ஆனந்தஜோதி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த சார்பதிவாளர் விதியை மீறி முறைகேடாக பத்திரம் செய்து கொடுத்து ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாயம் அடைந்துள்ளார் என்கிறார்கள்.

இதையறிந்த நித்யா, பட்டுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி பலமுறை மனு அளித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சார்பதிவாளராக இருக்கும் நடேஷ் பாரதி, நித்யாவுக்கு முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக சொல்கிறார்கள்.

நித்யாவை மீட்ட போலீஸ்

அலைக்கழிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த நித்யா, பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் நித்யாவை பாதுகாப்பாக மீட்டதுன் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சார்பதிவாளர் நடேஷ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வெளியே நடந்தது பற்றி எனக்கு தெரியாது. உள்ளே யாரும் தற்கொலை முயற்சி பண்ண வில்லை, நித்யா விவகாரம் குறித்து உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.