`கலையால் வாழ்ந்த எனக்கு, அதை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கு! - பாரம்பர்ய மரக்கா செய்யும் முதியவர்
தஞ்சாவூர் நாணயக்கார செட்டித்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் வயது 78. நான்காவது தலைமுறையாக தஞ்சாவூர் தட்டு உள்ளிட்ட கலைப்பொருள்கள் மற்றும் பூரண கும்ப மரியாதை அளிப்பதற்கான பெரிய மற்றும் சிறிய குடங்கள், சொம்பு உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அத்துடன் பழைமையை காக்கும் முயற்சியில் நம் முன்னோர்கள் அளவைக்கு பயன்படுத்திய மரக்கா செய்கிறார். இந்த வயதிலும் இயந்திரங்கள் உதவியின்றி பழைமையான முறையில் கைகளினாலேயே மரக்கா உள்ளிட்ட கலைப்பொருள்கள் செய்து ஆச்சர்யப்படுத்துகிறார்.
பரமசிவத்திடம் பேசினோம். ``எங்க அப்பா முத்துசாமி, சித்தப்பா அழகிரிசாமி. பத்தர் சமூகத்தை சேர்ந்த நாங்கள் தஞ்சாவூர் கலைத்தட்டு உள்ளிட்ட கலைப்பொருள்கள் செய்து வந்தோம். என்னோட 15வது வயதில் நானும் தஞ்சாவூர் தட்டு செய்வதற்கு கற்றுக்கொண்டேன். அப்போது அளவைக்கு இரும்பு மற்றும் பித்தளையில் மரக்கா செய்து விற்பனை செய்வோம். தஞ்சாவூர் தட்டு ராஜராஜ சோழன் காலத்தில் உருவானது. பின்னர் சரபோஜி மன்னர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. அளவைக்கு மரக்கா பயன்படுத்தினர்.
சோழர்கள் மற்றும் சரபோஜி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் மன்னர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை வரவேற்று நினைவு பரிசாக தஞ்சாவூர் தட்டு கொடுப்பது வழக்கம். இதை தயாரிப்பதற்காகவே சில குழுவை நியமித்திருந்தனர். அப்படி வழி வழியாக வந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக அதே தொழிலை செய்து வருகின்றனர். நான் எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறையாக செய்து வருகிறேன். தஞ்சாவூர் தட்டுமட்டுமன்றி பூரண கும்ப மரியாதைக்கான குடம் உள்ளிட்ட கலைப்பொருள்கள் பழைமையான முறையில் செய்கிறேன்.

கலைப்பொருள்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவிற்கு அளவைக்கு பயன்படுத்திய மரக்காவுக்கு இருந்தது. கலைப்பொருள்களுடன் சேர்த்து நாங்கள் மரக்காவும் செய்து வந்தோம். நெல், அரிசி உள்ளிட்ட பொருள்கள் அளப்பதற்கு மரக்கா பயன்படுத்தப்பட்டது. வீசம், ஆளாக்கு, கால்படி, அரைப்படி, முழுப்படி, மரக்கா போன்றவை நம் முன்னோர்கள் அளவைக்கு பயன்படுத்திய பொருள்கள். இன்றைக்கும் கிராமங்களில் பல வீடுகளில் இந்த பொருள்கள் இருக்கும்.
தற்போது அளவைக்கு இயந்திர எடை மெஷின் வந்து விட்டதால் மரக்கா போன்றவையின் பயன்பாடு முற்றிலுமாக அழிந்து விட்டது. இதை செய்வதையும் நிறுத்தி விட்டனர். வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நம்முடைய பாரம்பர்ய பொருள்களில் ஒன்றான மரக்காவை பார்த்து வியந்து பேசுவார்கள். அப்போது தான் நம் கலாசாரமான மரக்காவை நான் மீண்டும் செய்ய ஆரம்பித்தேன். நம் பாரம்பர்ய பொருளை மீட்கவும், அழியாமல் பாதுகாக்கவும் இதை செய்து வருகிறேன். மரக்காவை அளவைக்கு பயன்படுத்தவில்லை என்றாலும் காட்சிப்பொருளாக வைத்து கொள்வதற்கு மரக்காவை வாங்கி செல்கின்றனர். ஆர்டர் வருவதன் பேரில் அதற்கேற்ற அளவில் மரக்கா செய்கிறேன்.

தஞ்சாவூர் தட்டு எப்படி செய்யப்படுகிறதோ அதே முறையில் பித்தளை, வெள்ளி, செம்பு ஆகியவற்றை பயன்படுத்தி மரக்கா செய்கிறேன். தற்போது 15 கிலோ அளக்க கூடிய மரக்கா செய்துள்ளேன். இதன் மதிப்பு ரூ.1 லட்சம். நான் கற்றுக்கொண்ட கலை எனக்கு சோறு போட்டது. கலையால் வாழ்ந்
த எனக்கு பாரம்பர்யத்தை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. நடவு உள்ளிட்ட விவசாய பணிகளை தொடங்கும் போது மரக்கா நிரம்ப நெல் கொட்டி வைத்து வணங்கிய பிறகே வேலையை செய்வார்கள். அந்த அளவுக்கு நம் உணர்வில் கலந்திருக்கும் மரக்காவுக்கு உயிரூட்டுகிறேன்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


