அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது - ஈரானின் 3 எச்சரிக்கை

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஈரான் எண்ணெய் மீதான கெடுபிடிகளைச் சற்று தளர்த்தியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியிருக்கும் சூழலில், அமெரிக்கா ஈரான் வர்த்தகத்தை இறுக்கி வருகிறது.

இது குறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

"இந்தப் போரின் சமன்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும்... அல்லது யாருக்கும் கிடைக்கக் கூடாது!

காலிபாஃப்

நாங்கள் எண்ணெய் விற்பனை செய்யாத ஒரு பிராந்தியத்தில், வேறு எவரும் எண்ணெய் விற்க முடியாது.

நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. அதேபோல, அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் இந்த நீர்ச்சந்தியின் பாதுகாப்பு சாத்தியமாகும்.

இந்த நீர்ச்சந்தியின் நிலைமை போருக்கு முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம்."

அடுத்ததாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

"நமது பாதுகாப்புத் தற்காப்புக் கோட்பாடு மிகத் தெளிவானது: கண்ணுக்குக் கண்!

நமது உள்கட்டமைப்புகள் உட்பட ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்க எங்களைக் கட்டாயப்படுத்தும்.

அத்தகைய தாக்குதல்களுக்கு எந்த வகையான ஆதரவை வழங்கினாலும், அதில் பங்கு வகிக்கும் எவரும் நமது தாக்குதலுக்குரிய நியாயமான இலக்குகளாகவே கருதப்படுவர்."

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி

இந்த இரு பதிவுகள் மூலம் ஈரான் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஒன்று, ஈரான் எண்ணெய் விற்பனையை யாரும் தடுக்கக் கூடாது.

இரண்டாவது, ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும்.

மூன்றாவது, ஈரான் மீது யார் தாக்குதல் நடத்தினாலும், திரும்பத் தாக்குதல் நடத்தப்படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.