ஜந்தர் மந்தரில் தடியடி: ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்! - திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்டவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியில் டெல்லி போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தத் தடியடியை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சகேத் கோகலே எப்.ஐ.ஆர் ஒன்றை ஃபைல் செய்துள்ளார்.

சகேத் கோகலே
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

"2026 ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் டி.சி.பி சந்தீப் லம்பா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலைய SHO-விடம் புகார் அளித்துள்ளேன்.

நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில், காவல்துறை வன்முறை தொடர்பான மனுக்களுக்குப் பதிலளித்த அரசாங்கம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய யாரும் காவல்துறையை அணுகவில்லை என்று கூறியது.

எனவே, இன்று நான் ஒரு காவல் புகார் அளித்துள்ளேன்.

அந்தப் புகாரில் பின்வரும் பிரிவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

• பிரிவு 74 BNS — பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் விசைப் பயன்பாடு. பிணையில் வர முடியாத குற்றவியல் பிரிவு. ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.

• பிரிவு 115 BNS — வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல்.

• பிரிவு 131 BNS — கடுமையான தூண்டுதல் இன்றி தாக்குதல் அல்லது குற்றவியல் விசையைப் பயன்படுத்துதல்.

• பிரிவு 198 BNS — அரசு ஊழியர் காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் சட்டத்தை மீறுதல்.

• பிரிவு 3(5) BNS-உடன் சேர்த்துப் படிக்கப்படும் போது.

cjp protest
cjp protest

ஒருவர் கூட தப்பவிடப்படக் கூடாது!

ஒரு தகவல் Cognizable (தகவல் அறிந்த உடனேயே பிணையின்றி கைது செய்யக்கூடிய) குற்றத்தை வெளிப்படுத்தும் போது, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது கட்டாயம் என்பது லலிதா குமாரி எதிர் உத்தரப் பிரதேச அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலாகும்.

அன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் ஒன்றுகூடினர். 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெயர் வில்லைகள் (Name tags) இல்லாத சீருடை அணிந்த நபர்கள், ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகள், குழந்தைகள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள் உள்ளன.

அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமாகத் தாக்குதல் நடத்திய ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்களில் ஒருவர் கூட தப்பவிடப்படக் கூடாது".

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.