`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்... - அண்ணாமலை கருத்து!
நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பா.ஜ.க தலைவரும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை பதிவிட்டிருக்கிறார். அவரின் ஆங்கிலப் பதிவின் கருத்தாவது, ``கடந்த பல ஆண்டுகளாக, நீட் (NEET) தேர்வுக்கு ஆதரவாக நான் தனிப்பட்ட முறையில் குரல் கொடுத்து வந்துள்ளேன்.
இத்தேர்வு நாடு முழுவதும் மாணவர் சேர்க்கையில் ஒரே சீரான தன்மையைக் கொண்டுவந்துள்ளதாகவும், விளிம்புநிலை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்ற தங்களின் கனவை நனவாக்க ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் நான் வாதிட்டேன். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. ஒரே சீரான அமைப்பைக் கொண்டுவர வேண்டிய அமைப்பே தோல்வியடையும் போது, தேர்வை மீண்டும் ஒருமுறை எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.
இருப்பினும், இதற்கு எந்தப் பொறுப்பும் ஏற்கப்படவில்லை. இந்தச் சூழல்தான் மாணவர்களின் மனநிலையை மாற்றி, தங்களின் ஆதாங்கத்தை வெளிப்படுத்த அவர்களை வீதிக்கு வரவழைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. இருப்பினும், இங்கு எழும் முக்கியமான கேள்வி இதுதான். பாஜக தலைமையிலான மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை ஏன் தாமதிக்கப்பட்டது? உங்களை எது தடுத்துக்கொண்டிருந்தது?
மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்துபவர்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் பல வாரங்கள் நீடிக்கும் போது, சுயநலம் கொண்ட நபர்கள் களத்தில் புகுந்து, போராட்டத்தின் தொடக்கக் கோரிக்கைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத கருத்துகளைப் பேசுவது அல்லது தங்களின் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தை முழுமையாகத் திசைதிருப்ப முயல்வது இயல்பு. நீங்கள் மௌனமாக இருந்து, இந்தச் சுயநலவாதிகள் தங்களின் நோக்கங்களை நிறைவேற்ற அனுமதித்தால், நீங்கள் உங்களின் முதன்மை லட்சியத்திலிருந்து விலகிவிடுவீர்கள். தயவுசெய்து அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்!
பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையைப் பேணவும், தற்போதைய கவலைகளுக்குத் தீர்வுகாண விரைவான மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் வலியுறுத்துகிறேன். எந்தவொரு நாட்டின் பலமும், அந்நாட்டின் இளைஞர்கள் அந்த நாட்டின் அமைப்பு மீது வைத்துள்ள நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் நமது கல்வி முறையின் நியாயத்தன்மையிலும் நம்பகத்தன்மையிலும் நம்பிக்கையை இழந்தால், அது நாட்டின் எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளிவிடும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


