Samanthi: சீரியலின் கதை பிடிக்கலைனா சம்பளத்தை அதிகமாகச் சொல்லிடுவேன்! - சுர்ஜீத் பேட்டி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் தொடர் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் சுர்ஜித்.

அந்த சீரியலிலிருந்து விலகியவர் இப்போது சாமந்தி தொடரின் மூலம் மீண்டும் ஜீ தமிழ் சேனலுக்கு வந்திருக்கிறார். இந்த சீரியலுக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

Surjith - Samanthi Serial

நம்மிடையே பேசியவர், "சாமந்தி சீரியலோட ஷூட்டிங் இப்போதான் ஆரம்பிச்சிருக்கோம். ரொம்ப கலகலப்பான, ஜாலியான ஒரு டீம் அமைந்திருக்கிறது. இந்த சீரியலின் கதை ஒரு கியூட்டான லவ் ஸ்டோரி. கூடவே நிறைய ஃபேண்டசி எலிமென்ட்ஸ் இருக்கும்.

வழக்கமான சீரியல்களில் மாமியார்-மருமகள் சண்டைதான் பிரதானமாக இருக்கும், ஆனா இதுல அது ஒரு பகுதியா இருந்தாலும், அம்மாவுக்கும் பையனுக்கும் இடையேயான பாசப் போராட்டம் ரொம்ப முக்கியமானது. நான் இதில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

இந்த சீரியலில் வர்ற ஃபேண்டசி என்பது மேஜிக் மற்றும் ரோபோட் சம்பந்தப்பட்டது. தமிழ் சீரியலில் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு ரோபோட் முழுமையாக வருவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்த சீரியல் ஜீ தெலுங்கில் இதே தலைப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ஒரு தொடரின் ரீமேக்தான். தெலுங்கு பதிப்பில் கதாநாயகனாக நடிக்கும் ஆசிஷ் சக்கரவர்த்தி என்னுடைய நெருங்கிய நண்பன். தயாரிப்புத் தரப்பில் தமிழில் நடிக்கப் பொருத்தமான நபரைத் தேடியபோது அவன்தான் என் பெயரைப் பரிந்துரைத்தான்.

நடிகர் விஷ்வா சாரைச் சின்ன வயதில் மெட்டி ஒலி சீரியலில் பார்த்திருக்கிறேன். அவரும் இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும்.

ஷமிதா மேம் நடித்த படங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். செட்டில் அனைவருமே மூத்த கலைஞர்களாக இருப்பதால் கொஞ்சம் கவனமாகத்தான் நடிக்க வேண்டும்" என்றார்.

Surjith - Samanthi Serial
Surjith - Samanthi Serial

தொடர்ந்து பேசியவர், "நான் ஒவ்வொரு சீரியலைத் தேர்வு செய்யும்போதும், அதனுடைய கதையில் புதிதாக அல்லது தனித்துவமாக என்ன இருக்கிறது என்றுதான் பார்ப்பேன்.

கதை பிடிக்கவில்லை என்றால் சம்பளத்தை அதிகமாகக் கேட்டு நிராகரித்துவிடுவேன். நான் நடித்த சீரியலின் ஒவ்வொரு எபிசோடையும் தவறாமல் பார்த்து, என்ன தவறு செய்கிறேன் என்று கவனிப்பேன்.

இதில் ரோபோட், மேஜிக் என்ற விஷயங்கள் புதுமையாக இருந்தது." என்றவர், " சந்தியாராகம் குடும்பத்தை நான் ரொம்பவே மிஸ் பண்ணேன். நான் நடித்தபோது அதுதான் நம்பர் ஒன் சீரியலாக இருந்தது.

டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும்போது யாரும் விலகும் முடிவை எடுக்க மாட்டார்கள். ஆனால் நான் பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து முடிவெடுப்பவன் அல்ல. அங்கிருந்து வெளியேறித் தெலுங்கில் ஒரு சூப்பர் ஹிட் சீரியலில் நடித்தேன்.

Surjith - Samanthi Serial
Surjith - Samanthi Serial

இப்போது இந்த வாய்ப்பும் கிடைத்துள்ளது. நான் வாழ்க்கையில் ஒரு படி மேலேதான் போயிருக்கிறேன் என்பதால் அது நல்ல முடிவுதான்.

கோயிலுக்குப் போகும்போதுகூட இன்னும் நிறைய பேர் ஏன் தம்பி அந்த சீரியலை விட்டுப் போனீங்க? என்று உரிமையோடு கேட்பார்கள். இப்போது சாமந்தி தொடங்கியதும் என்னை அர்ஜுன் என்று அழைக்கத் தொடங்குவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.