Bigg Boss: மூன்று நேர்காணல், பரபரக்கும் போட்டியாளர் தேர்வு - இன்டர்வியூவில் என்ன கேள்விகள் தெரியுமா?
விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு தொடங்கவிருக்கிற பிக்பாஸ் சீசன் 10 க்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன.
இதுவரை சுமார் அறுபது பேரிடம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. நேர்காணல் மூன்று கட்டமாக நடக்கிறதாம்.
மூன்று நேர்காணல்களிலும் தேர்வாகிறவர்கள் அடுத்து நேரடியாக வரவழைக்கப்பட்டு மேலும் சில நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்கின்றனர்.
சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நேர்காணல்களில் என்னென்ன கேள்விகள் கேட்கிறார்களாம்? முன்னாள் போட்டியாளர் விக்ரமனிடம் பேசினோம்.
எனக்கு என்டமால் நிறுவனத்துல இருந்துதான் முதல்ல தொடர்பு கொண்டாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க விருப்பம் இருக்கானு கேட்டதும், போகலாம்னு சொன்னேன்.
இண்டர்வியூ நேரில்தான் நடந்தது. தொழில், குடும்ப பின்னணி உள்ளிட்ட என்னைப் பத்தின அறிமுகப் படலத்தையடுத்து,
பெர்சனாலிட்டி பத்தி தெரிஞ்சுக்க விரும்புனாங்க. அதுக்கேத்த மாதிரி கேள்விகளாக் கேக்குறாங்க.
எங்கிட்ட கோபப்படுகிற விஷயத்துல நீங்க எப்படி? கோபம் வருமா? எதுக்கெல்லாம் கோபம் வரும்னு கேட்டாங்க. ஒரு விஷயம் தப்புன்னு பட்டா நூறு சதவிகிதம் கோபப்படுவேன்னு சொன்னேன். அந்தப் பதிலை ரொம்ப ரசிச்சாங்க.
சுத்திக் கேமரா இருக்கற இந்த ஷோவுக்கு போக எப்படி தைரியமா முடிவெடுக்கிறீங்கனு கேப்பாங்க. இந்த மாதிரி கேள்விகளுக்கான நம் பதிலை ரொம்ப நுணுக்கமா கவனிக்கிறாங்க.
இந்த நேர்காணல் முடிஞ்சு அதுல அவங்க எதிர்பார்த்த வரையறைக்குள் நாம போயிட்டோம்னா அடுத்த கட்டமா மனநல ஆலோசகர் நம்ம கூட பேசுவாங்க.
மனநலன் தொடர்பா ஏற்கனவே ஏதாவது பிரச்னைகள் இருக்கா, மருந்து மாத்திரைகள் எடுக்கறோமானு தெரிஞ்சுக்கிடுவாங்க. உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்திருக்கானும் கேப்பாங்க.
இந்த செஷனையெல்லாம் முடிச்சுட்டா, அடுத்து முழு உடல் பரிசோதனை மாதிரி ஹெல்த் செக்-அப்பும் நான் போன சீசன்ல நடந்தது.
உடல் பிரச்னைகள் ஏதாவது இருந்தா உடன் எடுத்துட்டுப் போக வேண்டிய மருந்து மாத்திரைகளுக்காக இதைப் பண்றாங்க.
எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னா, அடுத்து ஆடியோ விஷுவல் ஷூட்தான் என்கிறார் இவர்.
நடிகை ஆர்த்தி கணேஷ்கரிடம் பேசிய போது,
இப்ப இன்டர்வியூவில் என்ன கேக்குறாங்கனு தெரியல. நான் கலந்துகிட்டது முதல் சீசன். அதனால என்ன கேப்பாங்கங்கிற எதிர்பார்ப்போடதான் போனோம். கலந்துக்கிடுற போட்டியாளர்கள் ஒருத்தரையொருத்தர் முன்கூட்டியே தெரிஞ்சுக்க முடியாதபடி ரகசியத்தை மெயின்டெய்ன் பண்ணினாங்க.
ஃபேமிலியா எப்படி ஒரு இடத்துல சேர்ந்து இருப்பாங்கங்கிறதைப் பல கேள்விகள் மூலமா எங்க கிட்ட கேட்டு பதிலை வாங்கினாங்க. மனநல ஆலோசகருடன் பேசறது, வழக்கு இருந்தா அது குறித்த விபரம் கேக்கறதுன்னு போச்சு. எல்லாம் முடியறப்ப நம்மகிட்ட ஒரு தன்னம்பிக்கையைப் பார்த்தா மட்டுமே அவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வந்து நிகழ்ச்சிக்குள் அனுப்புவாங்க என்றார் இவர்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

