பதநீரில் சீனி கலந்து போலி கருப்பட்டி - வரி ஏய்ப்பு; 5 வியாபரிகளுக்கு அபராதம் மட்டும் ரூ.38 கோடி!

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ’கற்பகத்தரு’ எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் உடன்குடி கருப்பட்டிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

கருப்பட்டி

இதனால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பனைத்தொழிலில் ஈடுபட்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகச் சீனி (சர்க்கரை) கலந்து கருப்பட்டி அல்லது கற்கண்டு தயாரித்தால் அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதாக  திருநெல்வேலி ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் ரூ.5 கோடி அளவிற்குச் சீனி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனியைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி எனக்கூறி ரூ.6 கோடி வரை விற்பனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

கருப்பட்டி

சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18%  ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதற்குப் பதிலாக, அசல் கருப்பட்டி எனப் பொய் கூறி 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக உடன்குடியைச் சேர்ந்த 5 வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.