டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; விற்பனையாளர் படுகாயம்! - இருவர் கைது!
மது வாங்க வந்தவர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக சின்னுசாமி, தற்காலிக உதவியாளராக பிரகாஷ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மது வாங்க வந்த கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, லைன்கொல்லையைச் சேர்ந்த சதீஷகுமார் ஆகியோர் பணம் குறைவாக உள்ளது, அடுத்த முறை வரும்போது தருகிறோம் என்று கூறி ரூ 30 குறைவாக கொடுத்து இரண்டு பீர் பாட்டில் வாங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து ரூ 40 குறைவாக கொடுத்து மேலும் ஒரு பீர் பாட்டில் கேட்டுள்ளனர்.

அதற்கு விற்பனையாளர் மறுக்கவே, அவரிடம் இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். அதனால் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு பீர் பாட்டில் கொடுத்துள்ளனர்.
மாலை மீண்டும் அங்கு வந்த இருவரும், தங்கள் டூவீலரிலிருந்த பெட்ரோலை காலி பீர் பாட்டிலில் நிரப்பி துணியால் அடைத்து பெட்ரோல் குண்டுபோல் தயாரித்து திரியில் தீயை வைத்து டாஸ்மாக் கடைக்குள் வீசியுள்ளனர். கடைக்குள் வெடித்து தீப்பற்றியதில் விற்பனையாளர் பிரகாஷின் முகம், தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது, பெட்ரோல் குண்டு வீசிய இருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


