’கோவை பெரியார் நூலகம் திறக்கப்படுவது எப்போது?’ – அதிகாரிகள் விளக்கம் என்ன?
கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் என்ற பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்குச் சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. தரைத் தளம் மற்றும் 7 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தின் மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,98,000 சதுர அடி ஆகும். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 90,000 புத்தகங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல அறிவியல் மையத்தில் விண்வெளி தொடர்பான ஸ்பேஸ் லிஃப்ட், பிளானட்டோரியம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில அம்சங்கள், கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம், 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், திட்டமிட்டபடி திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, நூலகத்தின் திறப்பு விழா தாமதமானது.
இந்த நிலையில், கடந்த மாதம் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும், திறப்பு விழா நடைபெறும் தேதி குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் கேட்டபோது, “நூலகக் கட்டடத்தின் அனைத்து முக்கிய கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. தற்போது நூலகர்களால் புத்தகங்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அறிவியல் மையத்தில் மட்டும் ஒரு சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன” என்றனர்.
அனைத்து பணிகளும் விரைவில் நிறைவடைந்தால் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


