ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்... - தேசிய விருது பற்றி சாச்சனா பேட்டி

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பிரிவில் அனல் அரசுக்கும் மற்றும் சிறந்த துணை நடிகை பிரிவில் நடிகை சாச்சனா நமிதாஸுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஜா - திரைப்படம்

சாச்சனாவுக்கு மகாராஜாதான் முதல் திரைப்படம். அதற்கு முன் ஜூனியர் ஆர்டிஸ்டாகச் சில படங்களில் நடித்தவருக்கு மகாராஜா திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

இப்போது அந்தப் படத்திற்காகத் தேசிய விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

மகிழ்ச்சியை நம்மிடையே பகிர்ந்துகொண்டவர், "உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. சொல்லப்போனால் என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தருணம் இது.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை, என் வார்த்தைகளில் இந்த மகிழ்ச்சியை எப்படி விவரிப்பது என்றும் புரியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்வாக உணர்கிறேன். நேரடி ஒளிபரப்பில் என் பெயர் வாசிக்கப்பட்ட அந்த நொடியில்தான் எனக்கே இந்த விஷயம் தெரியும்.

Sachana Namidass - 72nd National Award
Sachana Namidass - 72nd National Award

அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தேசிய விருதுகளை அறிவிக்கப் போகிறார்கள், நீ லைவ் பார் என்று மட்டும்தான் சொன்னார்கள். ஆனால், அந்தப் பட்டியலில் என் பெயர் இருக்குமா, இருக்காதா என்று எதுவும் தெரியாது.

அப்படியே லைவ் பார்த்துக் கொண்டிருக்கும்போது என் பெயர் வந்ததும் பயங்கர ஷாக்! அதே சமயம் அளவற்ற சந்தோஷமாகவும் இருந்தது. பயங்கரமாக ரியாக்ட் செய்துவிட்டேன்.

அதனை நீங்கள் என்னுடைய இன்ஸ்டா ரீல்ஸிலும் பார்த்திருப்பீர்கள். என்னுடைய சகோதரி சாதனா எனக்கு மேல் சந்தோஷப்பட்டார். அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம்.

என் அப்பா, அம்மா தங்களின் மகள் இப்படி ஒரு பெரிய தேசிய விருதை வாங்கியிருக்கிறாள் என்று ஆனந்தமும் பெருமையும் கொள்கிறார்கள்.

ஆரம்பக் காலத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத்தான் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஐயோ இது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று அன்றைக்கே நான் சினிமாவை விட்டு விலகியிருந்தால், இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியாது.

Sachana Namidass - 72nd National Award
Sachana Namidass - 72nd National Award

அன்று நான் எதிர்கொண்ட எல்லா கஷ்டங்களுக்கும், உழைப்புக்கும் கிடைத்த ஒரு மாபெரும் பலனாகத்தான் இந்தத் தேசிய விருதை நான் பார்க்கிறேன். இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் சார் அழைத்து எனக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அதுபோல, படக்குழுவினர் பலரும் வாழ்த்தினார்கள். நிச்சயமாக இந்த விருது எனக்கு மிகப்பெரிய பூஸ்ட். இனிவரும் காலங்களிலும் இதேபோல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும் என்ற ஒரு எனர்ஜியை இந்த அங்கீகாரம் எனக்குக் கொடுத்திருக்கிறது" என்றார் உற்சாகத்துடன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.