’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!
கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்விக்கு, “எங்களுடைய தலைவரின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு. எங்கள் தலைவர் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு நாங்கள் கட்டுப்பட கூடியவர்கள். தலைவரின் முடிவில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளில் வழங்கப்படும் டைரிகளில் சாதி பெயர் கேட்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். சாதி தொடர்பான அணுகுமுறை, பாகுபாடு இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில் செயல்படுகிறோம். சமூகநீதி மாணவர் விடுதியில் பல கோரிக்கைகள் பரிசீலனையில் இருக்கிறது. கோவையில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுவது குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருடன் பேசி இருக்கிறோம். கோவையில் அவர் இதை முன்னெடுத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார். மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.
கோவை இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் இயக்கம் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பத்தினர், பல்வேறு அமைச்சர்களை சந்தித்து மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். எத்தனை பேரை விடுதலை செய்யலாம் என்ற லிஸ்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், விடுதலை விரைவில் இருக்கும். இரட்டைக் குவளை விவகாரம் தொடர்பாக திராவிட இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். இரட்டைக் குவளை முறை எங்காவது இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சொல்லியிருக்கின்றார். தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் தேவைகள் கோரிக்கைகள் குறித்து மலைப்பகுதியாக சென்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை எந்த அமைச்சரும் மலைப்பகுதிகளுக்கு சென்றது கிடையாது. நாங்கள் நேரடியாக சென்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். சிறப்பு கவனம் எடுக்கும் அரசாக இருக்கும். அண்ணன் வைகோ அவர்களை எப்பொழுதும் நேசிக்க கூடியவர்கள் நாங்கள். அவர் எங்கள் மீது எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் அவரை நாங்கள் நேசித்துக் கொண்டே இருப்போம்” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

