டீன் ஏஜ் பயனர்கள்: Meta AI-யிடம் மனவேதனை பகிர்ந்தால்... இனி பெற்றோருக்கும் அலர்ட்!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் நிறுவனமான Meta, டீன் ஏஜ் பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனிமேல், டீன் ஏஜ் குழந்தைகள் Meta AI-யுடன் பேசும்போது தற்கொலை அல்லது சுய காயப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருப்பதுபோல தகவல்கள் தெரியவந்தால், பெற்றோருக்கு உடனடியாக அலர்ட் அனுப்பப்படும்.

ஏற்கெனவே இப்படிப்பட்ட உரையாடல்கள் நடந்தால், Meta AI உதவி எண்களைப் பரிந்துரைப்பதோடு, பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் பேசவும் அறிவுறுத்தி வருகிறது.

தற்போது அதற்கு அடுத்த கட்டமாக, பெற்றோர்களும் உடனடியாக தகவல் பெறும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

சித்தரிப்பு AI படம்

இந்த அலர்ட் வசதி தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் Instagram Parental Supervision பயன்படுத்தும் பெற்றோருக்கு செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் விரிவுபடுத்த Meta திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஒருவரின் உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாக AI கண்டறிந்தால், அவசரகால சேவைகளுக்கும் தகவல் தெரிவிக்கும் வசதியையும் Meta உருவாக்கி வருகிறது.

மேலும், டீன் ஏஜ் கணக்குகளுக்கு 13+ பாதுகாப்பு அமைப்பை இயல்புநிலையாக வழங்கி, வயதுக்கேற்ற பதில்களை மட்டுமே Meta AI வழங்கும் வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த புதிய அம்சம் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.